Mass காட்டும் bajaj
அரிய கனிமங்கள் தடையற்ற விநியோகத்தால் பஜாஜ் ஆட்டோ சேதக் இ-ஸ்கூட்டர் உற்பத்தியை மீண்டும் தொடங்கியது. அரிய கனிம காந்தங்களின் விநியோகம் சீரானதால், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் உற்பத்தியையும், நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்களுக்கு அதன் விநியோகத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது.
புனேவை தளமாகக் கொண்ட இந்த இரு, மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக சேதக் வாகனங்களின் விநியோகத்தைக் குறைத்திருந்தது.
தற்போது, பண்டிகைக் காலத் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அரிய கனிம காந்தங்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்கள் கிடைத்திருப்பதால், ஆகஸ்ட் 20 முதல் உற்பத்தி, விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சேதக்கிற்கான தேவை தொடர்ந்து வலுவாக உள்ளது. விநியோகம் சீராகிவிட்டதால், முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. பஜாஜின் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் உள்நாட்டு வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு, எலக்ட்ரிக் இரு, மூன்று சக்கர வாகன விற்பனையில் இருந்து வந்ததாகும்.
முன்னதாக, நிறுவனம் அரிய கனிம காந்தங்களுக்குப் பதிலாக லைட் ரேர்-எர்த் மேக்னட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், அரிய கனிம காந்தங்கள் இல்லாத ஒரு புதிய உதிரிபாக அமைப்பை உருவாக்குவது பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விநியோகச் சங்கிலி நிலைபெற ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என்றும் கூறியிருந்தது. சந்தை நிலைமை
முன்கூட்டியே வந்த பருவமழை காரணமாக இரு சக்கர வாகன சந்தை பாதிக்கப்பட்டது. “ஜூன் மாதத்தில் கனமழையை நாங்கள் எதிர்பார்க்காததால், நுகர்வோரின் தேவை குறைந்துவிட்டது. இருப்பினும், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 6% வரை வளர்ச்சி இருக்கும்,” என்று பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா கூறினார். முன்னதாக, அரிய கனிம காந்தங்கள் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திட்டமிட்ட உற்பத்தியில் 60% வரை குறைக்கப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
