நோவோ மருந்துகளுக்கு எச்சரிக்கை..
நோவோ மருந்துகளுக்காக சிடிஎஸ்சிஓ (CDSCO) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO), நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தின் செமாக்ளூடைடு (semaglutide), இன்சுலின் ஊசிகள் போன்ற போலி மருந்துகள் குறித்து சுகாதார நிபுணர்களுக்கும், நுகர்வோருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்துகளுக்கு 2-8°C வரையிலான குறிப்பிட்ட வெப்பநிலை கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
முறையற்ற முறையில் சேமிக்கப்பட்டால், இந்த மருந்துகளின் தரம் பாதிக்கப்படலாம். மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம், மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்களை சந்தையைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், காவல்துறையினர் திருட்டு குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO), நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தின் எடை குறைப்பு மருந்து செமாக்ளூடைடு (semaglutide), நீரிழிவு சிகிச்சைக்கான இன்சுலின் அஸ்பார்ட் (Insulin Aspart), டெக்லூடெக் (Degludec) உள்ளிட்ட சில மருந்துகள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, சுகாதார நிபுணர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், நோயாளிகளும் நுகர்வோர்களும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து, முறையாக விலைப்பட்டியல் (invoice) பெற்று, மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சந்தையில் இந்த மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், 1940-ஆம் ஆண்டு மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், அதன் பிவாண்டி மையத்திலிருந்து நாக்பூர், ராய்ப்பூர், கட்டாக், கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லும் வழியில் திருட்டு நடந்ததாக தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட இந்த ஊசி மருந்துகள் ஆர்.டி.என்.ஏ (rDNA)யைச் சார்ந்தவை. இவற்றுக்கு குறிப்பிட்ட வெப்பநிலையான 2°C முதல் 8°C வரையிலான சேமிப்புத் தேவைப்படுகிறது.
முறையான சேமிப்பு நிலைமைகளில் கையாளப்படாவிட்டால், இந்த மருந்துகளின் தரம் பாதிக்கப்படும். இது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
