டாடா எலக்ட்ரானிக்ஸில் ₹1,500 கோடி முதலீடு செய்யும் டாடா குழுமம்
டாடா குழுமம், எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதன் தீவிரமான விரிவாக்கத் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் விதமாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ₹1,500 கோடி புதிய பங்கு மூலதனத்தை முதலீடு செய்து, அதன் ஆப்பிள் ஐபோன் ஒப்பந்த உற்பத்தி வணிகத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
மேலும், டாடா சன்ஸ் நிறுவனம், டாடா எலக்ட்ரானிக்ஸ் ப்ராடக்ட்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ₹3,500 கோடி அதிகரித்து ₹6,250 கோடியாக உயர்த்தியுள்ளது. இது, திறன் விரிவாக்கத்திற்கான தாய் நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தைவானிய நிறுவனமான ஃபாக்ஸ்கானுடன் இணைந்து, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா எலக்ட்ரானிக்ஸ் உருவெடுத்து வருகிறது. “இது ஒரே நேரத்தில் திரட்டப்படும் நிதியாக இல்லாமல், பெரிய எலக்ட்ரானிக்ஸ் திட்டங்களுக்கான கட்டம் கட்டமான நிதியுதவியாகத் தெரிகிறது. இதன் மூலம், திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே குழுமம் தனது நிதித் திறனை வளர்த்துக் கொள்கிறது,” என்று வணிக நுண்ணறிவு ஆலோசனை நிறுவனமான ஆல்ட்இன்ஃபோவின் நிறுவனர் மோஹித் யாதவ் கூறினார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிதி திரட்டலில், ஒரு பங்கின் விலை ₹62 என நிர்ணயிக்கப்பட்டது. 2023, 2024 மற்றும் ஜனவரி 2025-ல் செய்யப்பட்ட முந்தைய முதலீட்டு வரவுகள், ஒரு பங்குக்கு ₹10 என விலை நிர்ணயிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் காட்டின. நிதிநிலையைப் பொறுத்தவரை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்,, FY24-ல் ₹3,752 கோடியாக இருந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம், FY25-ல் ₹66,206 கோடியாகக் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன் நிகர இழப்பு, முந்தைய ஆண்டு ₹825 கோடியாக இருந்ததிலிருந்து, ₹69 கோடியாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. FY26-க்கான நிதிநிலை அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின்படி, அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் 70%-க்கும் அதிகமானவை இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் அசெம்பிளி மற்றும் உயர் தொழில்நுட்ப பாகங்கள் துறைக்கு அப்பால், டாடா எலக்ட்ரானிக்ஸ், செமி கண்டக்டர் துறையிலும் கால் பதிக்கிறது. இதற்காக, குஜராத்தில் ஒரு ஃபேப்ரிக்கேசன் ஆலையையும், அசாமில் ஒரு சிப் அசெம்பிளி மற்றும் சோதனைப் பிரிவையும் அமைக்க சுமார் 1,400 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
