ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்
பாரசீக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் 22 கப்பல்களில், இந்தியாவின் 16.7 லட்சம் டன் கச்சா எண்ணெய், 3.2 லட்சம் டன் எல்பிஜி மற்றும் சுமார் 2 லட்சம் டன் எல்என்ஜி (LNG) ஆகியவை சிக்கிக்கொண்டுள்ளன; இவை ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடந்து செல்வதற்காகக் காத்திருக்கின்றன என்று கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா புதன்கிழமையன்று கூறினார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மூண்ட போது, ஹார்முஸ் நீரிணையில் 28 இந்தியக் கொடியிட்ட கப்பல்கள் இருந்தன. இவற்றில் 24 கப்பல்கள் நீரிணையின் மேற்குப் பகுதியிலும், நான்கு கப்பல்கள் கிழக்குப்பகுதியிலும் இருந்தன. கடந்த ஒரு வாரத்தில், இரு பக்கங்களிலிருந்தும் தலா இரண்டு கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடிந்தாக ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார்.
“ஹார்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் உள்ள 22 கப்பல்களிலும் பயணிக்கும் 611 மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கிழக்குப்பகுதியில் இருந்த கப்பல்களுடன் மேலும் ஒரு இந்தியக் கப்பல் இணைந்ததையடுத்து, தற்போது அங்கு மொத்தம் 3 கப்பல்கள் உள்ளன.
ஹார்முஸ் நீரிணையின் மேற்குப்பகுதியில் எஞ்சியுள்ள 22 இந்தியக் கப்பல்களில், ஆறு கப்பல்கள் எல்.பி.ஜி (LPG) எரிவாயுவை ஏற்றிச் செல்பவை; ஒன்று திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச் செல்லும் டேங்கர்; நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள்; ஒன்று ரசாயனப் பொருட்களை ஏற்றிச் செல்வது; மூன்று சரக்குப் பெட்டகம், மற்றும் இரண்டு மொத்த சரக்குக் கப்பல்கள் (bulk carriers) ஆகும்.
போரினால் பாதிக்கப்பட்ட இந்த நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சின்ஹா தெரிவித்தார்.
தற்போது, சுமார் 500 டேங்கர் கப்பல்கள் பாரசீக (அரேபிய) வளைகுடாவிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.
இந்தியா தனது கச்சா எண்ணெயில் சுமார் 88 சதவீதத்தையும், இயற்கை வாயுவில் 50 சதவீதத்தையும், எல்.பி.ஜி-யில் (LPG) 60 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேற்பட்ட அளவு, கப்பல் போக்குவரத்திற்கு இந்த நீரிணையைப் பயன்படுத்தும் சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து பெறப்பட்டது.
