ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.590 கோடி நிதி மோசடி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் ஊழியர்களால் ரூ.590 கோடி நிதி மோசடி செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இது கட்டமைப்பு ரீதியான பிரச்சினை இல்லை” என்று கூறினார். “வங்கிகள் போதுமான மூலதனத்தைக் கொண்டுள்ளன. தற்போது அவர்களின் மூலதன போதுமான அளவு 17% ஆகும். அதே நேரத்தில் விதிமுறைகளின் படி தேவை 11.5% ஆகும்” என்று அவர் கூறினார்.
நேற்று ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் இன்ட்ராடே அடிப்படையில் 20% சரிந்து, கிட்டத்தட்ட 16% குறைந்து, ரூ.70.39 ஆக வர்த்தகம் செய்யப்பட்டன. தற்போது ரூ.70.42ஆக சற்று உயர்ந்துள்ளன.
ஹரியானா அரசு இந்த வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளில், வங்கி ஊழியர்கள் மற்றும் பிறரால் செய்யப்பட்ட ரூ.590 கோடி மோசடி பற்றிய தகவலை இந்த வங்கி ஞாயிறு அன்று வெளியிட்டது. இந்த விஷயத்தை வங்கி ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாகவும், காவல்துறையில் புகாரை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆய்வு நிறுவனங்களின் மதிப்பீடுகளின்படி, மோசடி செய்யப்பட்ட தொகை வங்கியின் நிகர மதிப்பில் தோராயமாக 0.9%ஆகவும், அதன் 2026 நிதியாண்டின் வரிக்கு முந்தைய லாபத்தில் சுமார் 20% ஆகாவும் உள்ளது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்டின் 2026 நிதியாண்டின் வரிக்குப் பிந்தைய லாபத்தில் சுமார் 22% என இந்த தொகையை யூபிஎஸ் மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் மூலதன தாக்கம் வங்கியின் நிகர மதிப்பில் சுமார் 1% மட்டுமே இருக்கும் என்று அது கூறியது. 2026 நிதியாண்டின் வரிக்கு முந்தைய லாபத்தில் தோராயமாக 20% பாதிப்பு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
“இந்த மோசடி நடவடிக்கைகள் சண்டிகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிளையில் சில வங்கி ஊழியர்களால், ஹரியானா மாநில அரசாங்கக் கணக்குகளின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பிற தனிநபர்கள்/நிறுவனங்கள்/இதர பிரிவினரை இது உள்ளடக்கியிருக்கலாம்” என்று ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வங்கி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்த வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சுயாதீன தடயவியல் தணிக்கை நடத்த KPMG நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மற்ற வங்கிகளில் இணைக்கப்பட்ட கணக்குகளிலிருந்து, பணத்தை மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
