குவாலிடி வால்ஸில் 61.9 சதவீத பங்குகளை வாங்கிய மேக்னம் ஐஸ்கிரீம்
ஜூன் 25, 2025 தேதியிட்ட யூனிலீவருடனான (Unilever) பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், குவாலிடி வால்ஸ் இந்தியா நிறுவனத்தின் (KWIL) 61.9 சதவீத பங்கு மூலதனத்தை கையகப்படுத்தும் பணியை நிறைவு செய்துள்ளதாக தி மேக்னம் ஐஸ்கிரீம் கம்பெனி (TMICC) அறிவித்தது.
KWIL நிறுவனமானது, TMICC குழுமத்தின் பெரும்பான்மை உரிமையுள்ள துணை நிறுவனமாகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு, இந்தியாவின் பங்குச் சந்தைகளான BSE மற்றும் NSE ஆகியவற்றில் அதன் பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“பொருந்தக்கூடிய இந்தியச் சட்டங்களுக்கு இணங்கச் செய்யப்பட்ட ஒரு கட்டாயப் பொதுப் பங்கு கொள்முதல் முன்மொழிவு (mandatory tender offer) தற்போது நடைபெற்று வருகிறது; இது அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவின் விளைவாக, KWIL நிறுவனத்தில் TMICC-இன் பங்குடைமை 75 சதவீதத்தை மீறினால், குறைந்தபட்ச பொதுப் பங்குடைமை விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், TMICC தனது பங்குடைமையை ஒரு வருடத்திற்குள் 75 சதவீதத்திற்கு மிகாமல் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று அந்தச் செய்திக்குறிப்பு குறிப்பிட்டது.
தி மேக்னம் ஐஸ்கிரீம் கம்பெனியின் தலைமை நிதி அதிகாரி அபிஜித் பட்டாச்சார்யா இதுகுறித்துத் தெரிவிக்கையில், “உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும், அதே சமயம் சந்தை ஊடுருவல் குறைவாக உள்ள ஐஸ் கிரீம் சந்தைகளில் ஒன்றில், TMICC-இன் இருப்பை இந்த வர்த்தக நடவடிக்கை வலுப்படுத்துகிறது. இது TMICC-இன் உலகளாவிய பிராண்ட் வலிமையையும் புதுமைப் படைப்புத் திறன்களையும், KWIL-இன் வலுவான உள்ளூர் பாரம்பரியம், உற்பத்தித் தளம் மற்றும் இந்தியா முழுவதும் பரவியுள்ள விரிவான விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறது. TMICC-இன் உலகளாவிய நிபுணத்துவமும், இந்தியாவில் உள்ள வலுவான உள்ளூர் நிர்வாகக் குழுவும் துணையிருக்க, இத்துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களுக்குத் தொடர்ந்து மதிப்பை உருவாக்கும் வகையிலான, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு வணிகத்தை உருவாக்கவும் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று கூறினார்.
