20,000 – 30,000 பேரை பணி நீக்கம் செய்யும் ஆரக்கிள்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அதன் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா மைய விரிவாக்கத்திற்கு நிதி அளிக்கக சிரமப்படுவதால், பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக முதலீட்டு வங்கியான டிடி கோவனை மேற்கோள் காட்டி சிஐஓ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வங்கிகள் அதன் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் இருந்து பின் வாங்குவதால், அந்த நிறுவனம் 20,000 முதல் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடும்.
டேட்டா மையங்கள் மற்றும் முக்கியமற்ற பிரிவுகளுடன் தொடர்புடைய ஊழியர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். வாடிக்கையாளர்களும் இதன் தாக்கத்தை உணரக்கூடும். செலவுகளைக் குறைப்பதற்காக, ஆரக்கிள் புதிய வாடிக்கையாளர்களை, கட்டணத்தில் 40 சதவீதத்தை முன்பணமாகச் செலுத்துமாறு கேட்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஹார்ட்வேர்களை வழங்கும் “உங்கள் சொந்த சிப்பைக் கொண்டு வாருங்கள்” (bring your own chip) மாடல்களை இது ஆராய்ந்து வருகிறது. ஆரக்கிள் புதிய டேட்டா மைய முதலீடுகளைக் குறைத்துள்ளதால், சில நிறுவனங்கள் தங்கள் கிளவுட் திட்டங்களைத் தாமதப்படுத்தியுள்ளன அல்லது மாற்றியமைத்துள்ளன.
இந்த பணி நீக்கங்கள், சமீபத்திய ஆண்டுகளில் ஆரக்கிளின் மிகப்பெரிய பணி நீக்கங்களாக இருக்கும். அந்த நிறுவனம் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 10,000 வேலைகளைக் குறைத்ததுடன், செர்னரை வாங்கியதிலிருந்து பலமுறை அதன் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது.
வேலைகளைக் குறைப்பதன் மூலம் 800 – 1000 கோடி டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என்று டிடி கோவன் மதிப்பிடுகிறது. செலவினங்களை குறைப்பதற்காக, 2022-ல் வாங்கிய அதன் சுகாதார மென்பொருள் பிரிவான செர்னர் உட்பட சில வணிகங்களை விற்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க வங்கிகள் பின்வாங்கினாலும், சில ஆசிய வங்கிகள் அதிக வட்டி விகிதங்களில் ஆரக்கிளுக்குக் கடன் வழங்குகின்றன. இது ஆரக்கிள், அமெரிக்காவிற்கு வெளியே விரிவாக்கம் செய்ய உதவக்கூடும்.
இந்த தாமதங்கள் காரணமாக, OpenAI தனது குறுகிய கால கணினித் தேவைகளின் ஒரு பகுதியை மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற போட்டி நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.
