உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு 10% புதிய இறக்குமதி வரியை விதித்த டிரம்ப்
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளின் முக்கிய கூறுகளை நீக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% புதிய இறக்குமதி வரியை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
“ஓவல் அலுவலகத்திலிருந்து, அனைத்து நாடுகளுக்கும் உலகளாவிய 10% வரியில் கையெழுத்திட்டது எனக்கு மிகவும் பெருமை” என்று அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு இட்டுள்ளார். இது “கிட்டத்தட்ட உடனடியாக” அமலுக்கு வரும் என்றும் கூறினார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) பயன்படுத்தி பரஸ்பர வரிகளை விதிப்பதன் மூலம் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக 6–3 உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய உலகளாவிய இறக்குமதி வரி 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 இன் கீழ் விதிக்கப்படும். அமெரிக்க ஜனாதிபதி 150 நாட்கள் வரை தற்காலிக வரிகளை அறிமுகப்படுத்த இது அனுமதிக்கிறது. அதற்கு அப்பால் எந்தவொரு நீட்டிப்புக்கும் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும். முந்தைய நடவடிக்கைகளைப் போலன்றி, வரிகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது.
உலக நாடுகள் மீது வர்த்தக அழுத்தத்தைப் பராமரிக்க, வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் கீழ் பிரிவு 301 விசாரணைகள் மற்றும் பிரிவு 232 தேசிய பாதுகாப்பு விதிகள் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ கருவிகளையும் தனது அரசு பயன்படுத்தும் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் அரசின் இந்த அணுகுமுறை, தொடர்ச்சியை உறுதி செய்யும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் கூறினார். “வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து குறையும் வகையில் இதை நாங்கள் தொடர்ந்து நிவர்த்தி செய்வோம்” என்று அவர் கூறினார்.
இந்த மாற்றங்கள், அரசின் வருவாய் கணிப்புகளை கணிசமாக மாற்ற வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறினார். இந்நிலையில், தனக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
