உலகளாவிய இறக்குமதி வரியை 15%ஆக உயர்த்திய டிரம்ப்
அமெரிக்க அதிபரின் அவசரகால அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மீதான தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகளாவிய இறக்குமதி வரி விகிதத்தை தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாகக் கூறினார்.
ட்ரூத் சோஷியலில் அவர் இட்ட பதிவில், இந்த அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இந்த விகித உயர்வு சட்டப்பூர்வமானது தான் என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, வேறு ஒரு விதிமுறையின் கீழ் அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீது 10% இறக்குமதி வரியை டிரம்ப் விதித்தார். இந்நிலையில் அந்த 10% வரியை 15%ஆக உயர்த்தியுள்ளார்.
”அடுத்த சில மாதங்களில், எனது அரசு புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை தீர்மானித்து வெளியிடும். எங்களின் பொருளாதாரக் கொள்கைகளை இதன் மூலம் தொடர்ந்து செயல்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.
இறக்குமதிகள் மீது கடுமையான வரிகளை விதிக்க சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) அமெரிக்க அதிபர் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. தேசிய அவசரநிலைகளின் போது சில பொருளாதார பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு சட்டம் அனுமதி அளித்தது. ஆனால் பரந்துபட்ட அளவில், இறக்குமதி வரிகளை விதிக்க அங்கீகாரம் அளிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அமெரிக்க நாடாளுமன்றம் வசம் தான், வரிகள் மற்றும் வர்த்தக வரிகள் மீதான முதன்மை அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.
அந்த அவசரச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இறக்குமதி வரி விதிப்புகளை இந்தத் தீர்ப்பு செல்லாததாக்கியது. ஆனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பிற சட்டப்பூர்வ விதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.
