ஈரான் போரினால் நடுக்கடலில் சிக்கியுள்ள 70,000 டன்கள் பாஸ்மதி அரிசி
நடப்பு நிதியாண்டில் அதிக ஏற்றுமதியைப் பதிவு செய்வதில் நம்பிக்கையுடன் இருந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்கள், ஈரான் போரினால் சிக்கலில் உள்ளனர். மேற்கு ஆசியாவிற்கான பாஸ்மதி ஏற்றுமதி போரினால் பாதித்துள்ளதாகவும், தற்போது 60,000 முதல் 70,000 டன்கள் ஆழ்கடலில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பல்களில் இருப்பதாகவும், அவற்றில் சில பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதாகவும் தொழில்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
2025-26 ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில், 53.8 லட்சம் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 48.4 லட்சம் டன்களை விட 11 சதவீதம் அதிகமாகும் என்று அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (AIREA) தலைவர் சதீஷ் கோயல் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு சாதனை அளவில் 65 லட்சம் டன் பாஸ்மதி ஏற்றுமதியை எட்டுவதே எங்கள் இலக்காக இருந்தது. ஆனால் இந்த போர் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்தால் இத இலக்கை அடைவது சாத்தியம், இல்லையெனில் அது கடினமாக இருக்கும்” என்று கோயல் கூறினார். ஏற்றுமதியாளர்கள் APEDA தலைவர் மற்றும் பிற அதிகாரிகளைச் சந்தித்து சாத்தியமான விளைவுகள் மற்றும் அரசாங்கம் எவ்வாறு ஆதரவை வழங்கக்கூடும் என்பதைப் பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
கடலில் தற்போது சிக்கியுள்ள அளவு குறித்து கேட்டபோது, சங்கம் இன்னும் அரசாங்கத்துடன் புள்ளிவிவரங்களை மதிப்பிட்டு வருவதாகவும், இருப்பினும் 60,000 முதல் 70,000 டன் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இதுவரை கப்பல் கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இல்லை என்றாலும், அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் நிலையற்றதாகவே உள்ளது என்று கோயல் கூறினார்.
2024–25இல், இந்தியா 594 கோடி டாலர் மதிப்புள்ள 60.7 லட்சம் டன் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தது. இதில், 11.7 லட்சம் டன்கள் சவுதி அரேபியாவிற்கு மட்டும் அனுப்பப்பட்டன. அதே நேரத்தில் 8.6 லட்சம் டன்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டன.
