பயணிகள் வாகன சந்தையில் 20% பங்கை அடைய டாடா மோட்டர்ஸ் திட்டம்
இந்தியப் பயணிகள் வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 60 லட்சம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இச்சந்தைப் பிரிவில் 20 சதவீத சந்தைப் பங்கை கைப்பற்ற டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (TMPV) பிரிவின் டீலர் வணிகத் திட்டமிடல் கூட்டத்தில் பேசிய அவர், 2030-ஆம் ஆண்டிற்குள் ₹35,000 கோடி முதலீடு செய்ய ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும், தேவைக்கேற்ப அத்திட்டத்தை மாற்றியமைத்துச் செயல்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் விற்பனை அளவின் அடிப்படையில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக, பயணிகள் வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 2026 நிதியாண்டில், டாடா மோட்டார்ஸ் மொத்தம் 6,31,387 வாகனங்களை விற்பனை செய்து, இந்திய உள்நாட்டுப் பயணிகள் வாகனச் சந்தையில் 13.48 சதவீதப் பங்கைத் தக்கவைத்துக் கொண்டது. வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனப் பிரிவில், 40.2 சதவீதச் சந்தைப் பங்குடன் டாடா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளது. வரும் நான்கு ஆண்டுகளில் இந்த நிலையை மேலும் வலுப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“இந்திய வாகனத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் இத்துறையில் 60 லட்சம் வாகனங்கள் விற்பனையாகும் நிலை உருவானால், நாமும் 12 லட்சம் வாகனங்கள் விற்பனை மற்றும் 20 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கை இலக்காகக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது,” என்று சந்திரசேகரன் கூறினார். சரியான தயாரிப்புகள், முதலீடுகள், உற்பத்தித் திறன் மற்றும் சிறப்பான செயல்பாடுகள் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று வலியுறுத்திய அவர், “2030-ஆம் ஆண்டிற்குள் ₹35,000 கோடி முதலீடு செய்ய ஏற்கனவே உறுதியளித்துள்ளோம்; செயல்பாட்டின் போது தேவைக்கேற்ப இத்திட்டத்தை மாற்றியமைப்போம்,” என்றும் கூறினார்.
நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்த சந்திரசேகரன், ‘டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள்’ (TMPV) பிரிவு மிகப்பெரிய ஆற்றலையும் வளர்ச்சிக் காணும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
