ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திய விப்ரோ நிறுவனம்
மார்ச் 1 முதல் விப்ரோ தனது அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுகளை வழங்கி வருகிறது. செப்டம்பரில் அளித்திருக்க வேண்டிய சம்பள உயர்வு தாமதமானதால், அதன் பணியாளர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை இது வழங்குகிறது என்று அந்நிறுவனத்தின் உள் மின்னஞ்சல் தெரிவிக்கிறது. இருப்பினும், சம்பளா உயர்வுகளின் சதவீதம் உடனடியாக குறிப்பிடப்படவில்லை.
இறக்குமதி வரி விதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளினால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து, இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் சம்பள உயர்வுகள் மற்றும் இதர சலுகைகள், போனஸ்களை அளிப்பதில் எச்சரிக்கையாக உள்ளன.
டிசிஎஸ் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்கு சம்பள உயர்வுகளை உயர்வுகளை ஒத்தி வைத்தது. மேலும் பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5 முதல் 7 சதவீதம் வரை சம்பள உயர்வுகளை வழங்கியது. ஆகஸ்டில் தாமதப்படுத்திய பின்னர், சமீபதில் காக்னிசண்ட் சம்பளத்தை அதிகரித்தது
சம்பள உயர்வுகளை இறுதியாக அளிக்கும் முக்கிய ஐடி நிறுவனங்களில் விப்ரோ கடைசியாக உள்ளது. வணிக சூழலைப் பொறுத்து ஒரு முடிவை எடுப்பதாக அது பலமுறை கூறியுள்ளது. அதன் தலைமை மனிதவள அதிகாரி சௌரப் கோவில், இது குறித்து விரைவாக முடிவெடுக்கும் நிலையில் இருப்பதாக ஜனவரியில் கூறியிருந்தார்.
டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டிற்கான 100 சதவீத காலாண்டு அளவிலான, ஊக்கத்தொகை அடிப்படையிலான ஊதியத்தையும் விப்ரோ வழங்கியது. இது ஊழியர்களுக்கு அவர்களின் பிப்ரவரி சம்பளத்துடன் வழங்கப்படும். ஊதிய உயர்வுகள் தாமதமானாலும், இந்நிறுவனம் ஊக்கத்தொகை அடிப்படையிலான ஊதியங்களில் தாராளமாக உள்ளது. முதல் இரண்டு காலாண்டுகளில் கூட, அனைத்து ஊழியர்களுக்கும் 90 சதவீதத்திற்கும் மேலாக ஊதியம் வழங்கியது.
