117 டாலரை எட்டிய கச்சா எண்ணெய் விலை
மத்திய கிழக்குப் போர் நீடித்த விநியோக இடையூறுகளை உருவாக்கக்கூடும் என்ற கவலையால், நேற்று கச்சா எண்ணெய் விலை, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பீப்பாய்க்கு $100 ஐத் தாண்டின. தற்போது 117 டாலராக மேலும் அதிகரித்துள்ளது.
இது ரஷ்யாவின் 2022 உக்ரைன் படையெடுப்பின் ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு காணப்படாத அளவைத் தொட்டது. இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அகற்ற செலுத்த வேண்டிய சிறிய விலை இது என்று இந்த விலை உயர்வை அலட்சியம் செய்தார். இந்த உயர்வு தற்காலிகமானது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
“ஈரான் அணுசக்தி அச்சுறுத்தலின் அழிவு முடிந்ததும், கச்சா எண்ணெய் விலை விரைவாகக் குறையும். குறுகிய கால எண்ணெய் விலை உயர்வுகள், உலக பாதுகாப்பு மற்றும் அமைதிக்கும் உலகம் செலுத்த வேண்டிய மிகச் சிறிய விலையாகும்” என்று அவர் நேற்று மாலை சமூக ஊடகங்களில் எழுதினார்.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20 சதவீதம் இதன் வழியாக கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவைச் சுற்றியுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் இதற்கிடையில் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் டெஹ்ரானில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் அண்டை நாடுகளின் உள்கட்டமைப்பு மீது பழிவாங்கும் தாக்குதல்களுக்கு வகை செய்யும் என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே அமெரிக்காவில் அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகளுக்கு வழிவகுத்துள்ளன. இது நவம்பரில் நடக்க உள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க எரிசக்தி தகவல் ஆணையத்தின் படி, உலக எண்ணெய் உற்பத்தியில் ஈரான் சுமார் நான்கு சதவீதத்தை கொண்டுள்ளது. அதன் எண்ணெய் தொழில் சர்வதேச தடைகளுக்கு உட்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அளவு இன்னும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
