ஈரான் – அமெரிக்கா போர் தொடங்கினால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $110ஆக உயரும்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $110 (bbl) அளவை எட்டக்கூடும் என்றும் இது தற்போதைய நிலைகளிலிருந்து சுமார் 57 சதவீதம் உயரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதே சமயத்தில், ஈரான் அமெரிக்கா இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், எண்ணெய் உற்பத்தில் உலக அளவில் தேவைக்கும் அதிகமாக உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை சீராக வாய்ப்புள்ளது.
அமெரிக்கா மேற்கு ஆசியாவில் போர் கப்பல்களை நிலைநிறுத்தத் தொடங்கியதிலிருந்து, கச்சா எண்ணெய் விலைகள் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்த நடவடிக்கை, ஹார்முஸ் ஜலசந்தியுடன் பிணைக்கப்பட்டுள்ள சமச்சீரற்ற ஆபத்தை பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதட்டம் அதிகரித்து, தாக்குதல் தொடங்கினால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $95 முதல் $110+ வரை உயரும் வாய்ப்பு உருவாகும் என்று கூறுகின்றனர்.
“விலை உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், விலைகள் ஒரு பீப்பாய்க்கு $90 வரை உயரும் என்றும் நாங்கள் கருதுகிறோம். வரும் வாரங்களில் அமெரிக்கா ஈரானை தாக்கவில்லை என்றால், விலைகள் மீண்டும் $60 (பிரெண்டிற்கு) ஆகக் குறையக்கூடும்” என்று ஈக்விரஸ் செக்யூரிட்டிஸின் மௌலிக் படேல் மற்றும் குஷ்பூ பலானி சமீபத்திய குறிப்பில் எழுதினர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் அச்சுறுத்தல்களை மீண்டும் தொடங்கிய பின், பிப்ரவரி முழுவதும் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே இருந்தன. வெள்ளிக்கிழமை, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $72 என்ற அதிகபட்ச அளவை எட்டிய பின்னர், சுமார் $70/பிப்பாய்க்கு வர்த்தகமானது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஈரானின் ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பீப்பாய்கள் (mbpd) எண்ணெய் உற்பத்திக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படக்கூடிய இடையூறு காரணமாக, அடுத்த சில நாட்களில் எண்ணெய் விலைகள் நிலையற்றதாகவே இருக்கும் என்று நோமுரா ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
