ஈரானின் எண்ணெய் வளங்களை கைபற்றப் போவதாக டிரம்ப் அறிவிப்பு
நேற்று இரவு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்கள் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களைத் தாக்கின. ஈரானிய தலைநகரில் மின்சார உள்கட்டமைப்பு குறிவைக்கப்பட்ட நிலையில், இந்த மோதல் உலகளாவிய பங்கு மற்றும் எண்ணெய் சந்தைகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட மின்வெட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு பகிரங்கமாக அழுத்தம் கொடுத்த போதிலும், தரைவழித் தாக்குதலுக்கு வாஷிங்டன் சதி செய்வதாக டெஹ்ரான் குற்றம் சாட்டிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நேர்காணலில், “ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்ற” விரும்புவதாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை, அவர், “நாங்கள் அவர்களுடன் [ஈரான்] ஒரு உடன்பாடு செய்வோம், நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார்.
போரின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகளை நடத்திய பாகிஸ்தான், வரும் நாட்களில் “அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை” நடத்தத் தயாராகி வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து டிரம்பின் கருத்துக்கள் வெளிவந்தன.
டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. பெருநகர டெஹ்ரானின் ஒரு பகுதியான ரே நகரில் மற்றொரு வெடிப்பு நிகழ்ந்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசாங்கத்தின் உள்கட்டமைப்பை, “தெஹ்ரான் முழுவதும் தற்போது தாக்கி வருவதாக”இஸ்ரேலிய இராணுவம் திங்களன்று கூறியது.
சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகளை அமெரிக்கா அனுப்பி வருவதாகவும், அதே நேரத்தில் தரைவழிப் படையெடுப்புக்குத் திட்டமிட்டு வருவதாகவும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் முன்னதாகக் கூறியிருந்தார். அமெரிக்க வீரர்கள் களமிறக்கப்பட்டால் பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராக இருப்பதாக அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில், 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சார்ந்த இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு பேரல் ஒன்றுக்கு 72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 115 டாலராக உயர்ந்துள்ளது.
