INFOSYS கொடுத்த ஷாக்..!!!
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், வரும் ஆண்டுகளில் கல்லூரிகளிலிருந்து நேரடியாகப் பட்டதாரிகளைப் பணியமர்த்துவதைக் குறைக்க உள்ளது. ஆட்டோமேஷன் காரணமாக ஆரம்ப நிலை வேலை வாய்ப்புகள் தொடர்ந்து சுருங்கி வரும் நிலையில், இது நாட்டின் பொறியியல் மாணவர்களிடையே உள்ள கவலைகளை மேலும் அதிகரிக்கிறது.
“அதிகரித்த உற்பத்தித்திறன் காரணமாக, எதிர்காலத்தில் இன்ஃபோசிஸ் (INFY) குறைவான அளவில் புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தும் என்று எதிர்பார்க்கிறது,” என்று பிஎம்ஓ கேபிடல் மார்க்கெட்ஸ் ஆய்வாளர்களான கீத் பாக்மேன், பிராட்லி கிளார்க், ஆடம் ஜே. ஹோலெட்ஸ் மற்றும் ஜொனாதன் ஸ்டெய்ன் ஆகியோர் டிசம்பர் 16 அன்று வெளியிட்ட ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தின் நிர்வாகத்துடனான உரையாடலை மேற்கோள் காட்டி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தாக்கம், உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையால் வாடிக்கையாளர் செலவினங்களில் ஏற்படும் சரிவு மற்றும் அமெரிக்காவில் உள்ள விசா கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்தத் துறை மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆரம்ப நிலை வேலைகளில் சரிவு ஏற்படும் என்று வெளிப்படையாகக் கணித்த முதல் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சேவை நிறுவனமாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மந்தமாக உள்ளது. இது நாட்டின் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு ஒரு பின்னடைவாகும்.
இருப்பினும், இன்ஃபோசிஸ் நடப்பு நிதியாண்டில் அதிக புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தும் என்று எதிர்பார்க்கிறது. “இந்த ஆண்டுக்கான புதிய பணியமர்த்தல் குறித்து நாங்கள் வழிகாட்டுதல் வழங்கியிருந்தோம், மேலும் 20,000 பேரை பணியமர்த்த எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தோம்,” என்று இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரி ஜெயேஷ் சங்ராஜ் அக்ரோபர் 16 அன்று கூறினார்.
“நாங்கள் முதல் பாதியில் ஏற்கனவே 12,000-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தியுள்ளோம். எனவே, இந்த ஆண்டு 20,000 பேருக்கு அருகில் பணியமர்த்தும் எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்” என்றார்.
நிதியாண்டு 2025-ல் இன்ஃபோசிஸின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 3.85% அதிகரித்து $1,928 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் அதன் அறிவிப்புகளின்படி, கடந்த நிதியாண்டில் கல்லூரிகளிலிருந்து நேரடியாக 15,000 பேரைப் பணியமர்த்தியுள்ளது.
