ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் விதமாக, அமெரிக்கா ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டு, அங்கு விதைக்கப்பட்டுள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற தொடங்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் இட்டுள்ள இரண்டு பதிவுகளில், முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையைத் திறந்து வைக்கத் தவறியதாக ஈரானைக் குற்றம் சாட்டிய டிரம்ப், அந்த நீர்வழியைப் பாதுகாக்க அமெரிக்க கடற்படை நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்தார்.
“உடனடியாக அமலுக்கு வரும் வகையில், உலகின் தலைசிறந்த அமெரிக்க கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிடும் செயல்முறையைத் தொடங்கும்” என்று அறிவித்துள்ளார்.
ஈரானிய சுங்கக் கட்டணங்களுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எதிராகவும் அமெரிக்கப் படைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும், அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“ஈரானியர்கள் ஜலசந்தியில் பதித்த கண்ணிவெடிகளை அழிக்கவும் நாங்கள் தொடங்குவோம். சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் தேடி இடைமறிக்குமாறு எமது கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
தெஹ்ரானின் நடவடிக்கைகளை நிர்ப்பந்தமானவை என்று வர்ணித்த டிரம்ப்,
”இது உலகளாவிய மிரட்டிப் பறித்தல் ஆகும். உலக நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக அமெரிக்கா, ஒருபோதும் மிரட்டலுக்கு பணிய மாட்டார்கள்” என்றார்.
பாரசீக வளைகுடாவிற்கும் ஓமான் வளைகுடாவிற்கும் இடையில் உள்ள குறுகிய ஆனால் முக்கியமான போக்குவரத்துத் தடைப் பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தி, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட எரிவாயு ஏற்றுமதியில் கணிசமான பங்கைக் கையாளுகிறது. இந்த வழித்தடத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் அல்லது இராணுவ மோதல் அதிகரிப்பும் எரிசக்தி சந்தைகள் மற்றும் கடல்வழி வர்த்தகத்தில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தும்.
மற்றொரு பதிவில், ”ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாக உறுதியளித்தது, ஆனால் அதைச் செய்யத் தெரிந்தே தவறிவிட்டது” என்று டிரம்ப் கூறினார். கடலில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற நிச்சயமற்ற தன்மை, கப்பல் உரிமையாளர்களை அந்தப் பாதையைப் பயன்படுத்துவதிலிருந்து தடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஈரானின் இராணுவத் திறன்களை கடுமையாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், தேவைப்பட்டால், பதற்றத்தை மேலும் அதிகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
