ஊழியர் நலன்களுக்கு ரூ.2,800 கோடி முதலீடு செய்யும் அமேசான் இந்தியா
தனது ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிதி நல்வாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், தனது செயல்பாட்டு வலையமைப்பை விரிவுபடுத்தவும் ₹2,800 கோடிக்கு மேல் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமேசான் இந்தியா அறிவித்தது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் $3500 கோடிக்கும் மேல் முதலீடு செய்வதற்கான, இந்நிறுவனத்தின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முதலீடு அமைந்துள்ளது. தனது முக்கிய மின் வணிகம் மற்றும் விரைவு வர்த்தகச் சேவைகளை விரிவுபடுத்தி வரும் வேளையிலும், தற்போதுள்ள நகரங்களில் ‘அமேசான் நவ்’ சேவையின் இருப்பை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள வேளையிலும் இந்த முதலீடு வந்துள்ளது.
“எங்கள் செயல்பாட்டு வலையமைப்பின் இதயமாக எங்கள் ஊழியர்கள் உள்ளனர். மேலும் ஊழியர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நிதி நல்வாழ்வு ஆகியவற்றின் தரத்தை உயர்த்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த ஆண்டு, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த ₹2,800 கோடிக்கும் (சுமார் USD 30 கோடி) அதிகமாக முதலீடு செய்கிறோம். அதே நேரத்தில், எங்கள் செயல்பாட்டு வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான விநியோகங்களைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துகிறோம். எங்கள் முயற்சிகள் ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகின்றன. இது எங்கள் ஊழியர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நிதி உள்ளடக்கத்திற்கான அணுகலை விரிவுபடுத்த உதவுகிறது” என்று அமேசான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகள் துணைத் தலைவர் அபினவ் சிங் கூறினார்.
தொழிலாளர் சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட பல தரநிலைகளுடன் ஊழியர்களுக்கான அதன் திட்டங்கள் ஒத்துப்போகின்றன என்று அமேசான் இந்தியா நிறுவனம் கூறியது. “2026 ஆம் ஆண்டின் முயற்சிகளில், விநியோக ஊழியர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய ஓய்வு வசதிகளை வழங்குவதற்காக ‘புராஜெக்ட் ஆஷ்ரே’யை விரிவுபடுத்துதல், ‘சுஷ்ருதா’ போன்ற சுகாதார மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களை புதிய முயற்சிகளுடன் விரிவுபடுத்துதல், அதே நேரத்தில் நாடு தழுவிய மருத்துவ முகாம்கள் மூலம் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலைச் சாத்தியமாக்குதல் ஆகியவை அடங்கும்,” என்று அந்த நிறுவனம் கூறியது.
