மைத்தோஸால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆராயும் ரிசர்வ் வங்கி
ஆந்த்ரோபிக்கின் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியான மைத்தோஸால் ஏற்படக்கூடிய அபாயங்களைப் புரிந்து கொள்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி உலகளாவிய கட்டுப்பாட்டாளர்கள், இந்திய வங்கிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன.
உலகளாவிய கட்டுப்பாட்டாளர்களின் மதிப்பீட்டைப் போலவே, இந்திய ரிசர்வ் வங்கியின் முதற்கட்ட மதிப்பீடும், மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிவதையும் பயன்படுத்துவதையும் துரிதப்படுத்துவதன் மூலம் மைத்தோஸ் இணையப் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டுவதாக, அந்த வட்டாரங்கள் கூறின.
ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள், வங்கிகள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், தயார் நிலையையும் மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரித்துள்ளனர். ஜப்பானில், நிதி கண்காணிப்பு அமைப்பு இந்த வாரம் வங்கிகளின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி மைத்தோஸ் தொடர்பான முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது.
கடந்த பதினைந்து நாட்களில், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், குறிப்பாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் அதிகாரிகளுடன், மைத்தோஸ் தொடர்பான அபாயங்கள் குறித்து கலந்தாலோசனைகளை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முற்படலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“உலகளவில், என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் மற்ற நாடுகள் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளுடன் விவாதித்து வருகிறோம்” என்று அந்த வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது.
இந்தியாவின் பணப்பரிவர்த்தனை ஆணையமான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), பரந்த அளவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, பாதிப்புகளையும் “முதல் நாள்” சைபர் அபாயங்களையும் கண்டறிவதற்காக, ஒரு சில வங்கிகளுடன் இணைந்து, மைதாஸ் (Mythos) மென்பொருளுக்கான முன்கூட்டிய அணுகலைப் பெற முயற்சித்து வருகிறது என்று அந்த வட்டாரம் கூறியது.
இருப்பினும், ஆந்த்ரோபிக்கின் மைதாஸ் அமைப்புகள் அமெரிக்காவில் உள்ள கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சர்வர்களில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளதாலும், வெளிநாட்டு அதிகார வரம்புகளில் உள்ளூர் தரவுகளில் சோதனைகளை நடத்துவது சவாலாக அமையக்கூடும் என்பதாலும், அத்தகைய அணுகல் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது.
