முதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்
உலகின் மிகப்பெரிய முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான தி கேப்பிடல் குரூப், அதானி குழும நிறுவனங்களில் அதன் முதலீட்டுப் பங்குகளை அதிகரித்து வரும் அதே வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அதன் பங்குகளை படிப்படியாகக் குறைத்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமங்களுக்கு இடையிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தை இது குறிக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிதி மேலாண்மை நிறுவனம், கடந்த சில வாரங்களில் அதானி குழுமத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களில் 200 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளதாக, இச்செய்தி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 5-ஆம் தேதி அன்று, அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தில் சுமார் 2 சதவீதப் பங்குகளை, திறந்த சந்தை வர்த்தகத்தின் மூலம் ரூ.7486 கோடிக்கு கேப்பிடல் குரூப் வாங்கியுள்ளதாக, BSE-இன் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் 3.3 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்த முதலீட்டு நிறுவனம், அதானி பவர் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களிலும் சந்தை கொள்முதல் வாயிலாக தலா 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலான பங்குகளை வாங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நேரடித் தொடர்பு கொண்ட நிறுவனங்கள் குறைவாக இருப்பதால், சில முதலீட்டாளர்களின் விருப்பப் பட்டியலிலிருந்து விலகிச் சென்றிருந்த இந்தியச் சந்தையில் அதானி நிறுவனங்கள் மட்டும் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தித் துறை மாற்றம் மற்றும் உற்பத்தித் துறை விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்குரிய அரிய வாய்ப்புகளாகப் பார்க்கப்படுகின்றன. இந்த மாற்றமானது, இந்தியாவின் பொருளாதார விரிவாக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியில் முதலீடு செய்வதை நோக்கிய பரந்த அளவிலான மாற்றத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.
கடந்த ஓராண்டு காலத்தில், அதானி பவர், அதானி கிரீன் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் முறையே 94 சதவீதம், 35 சதவீதம் மற்றும் 25 சதவீதம் எனப் பெரும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. பல மாதங்களாக நீடித்த ஒழுங்குமுறை சார்ந்த ஆய்வுகளுக்கும், சந்தையின் நிலையற்றத் தன்மைக்கும் பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் துளிர்விட்டிருப்பதை இது உணர்த்துகிறது.
