எல் நினோ நிகழ்வு இந்தியாவிற்கு 1 லட்சம் கோடி டாலர் இழப்பை ஏற்படுத்த வாய்ப்பு
டார்ட்மவுத் கல்லூரியின் புவியியல் துறை இணைப் பேராசிரியரான ஜஸ்டின் எஸ். மாங்கின் வரவிருக்கும் எல் நினோ நிகழ்வின் செயல்முறை, உலகளாவிய வானிலை அமைப்புகளில் அதன் தாக்கங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான அதன் விளைவுகள் குறித்து விளக்குகிறார்:
’எல் நினோ என்பது நமது சிக்கலான காலநிலை அமைப்பில் நிகழும் ஒரு நிகழ்வாகும். இது பொதுவாக வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் ஒரு மாற்றமாகவே கருதப்படுகிறது; அதாவது, சராசரி அளவை விட கடல் மேற்பரப்பு வெப்பநிலை எவ்வளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கிறது என்பதே இதன் அடிப்படையாகும். பெரு (Peru) நாட்டிற்கு அருகிலுள்ள கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும்போது எல் நினோ ஏற்படுகிறது.
தொலைத் தொடர்புகள் எனப்படும் நிகழ்வுகள் மூலம் எல் நினோ உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது; இவை சராசரியை விட அதிக வெப்பநிலை அல்லது மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்கள் என வெளிப்படலாம். உதாரணமாக, இந்த ஆண்டு இந்திய பருவமழை சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காலநிலை அமைப்பு பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதையும், அந்தத் தாக்கத்தை உலகளாவிய மேக்ட்ரோ பொருளாதார அளவில் அளவிட முடியும் என்பதையும் எங்கள் முந்தைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எரிசக்தி, போக்குவரத்து, தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்யத் தொழிலாளர்கள் மற்றும் மூலதனத்தை ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றின் மீது காலநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டு எல் நினோ நிகழ்வு மிகத் தீவிரமாக நிகழும் என்று கிட்டத்தட்ட உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது; இது நவம்பர் 2026 மற்றும் ஜனவரி 2027-க்கு இடைப்பட்ட காலத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எல் நினோ நிகழ்வு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவு குறைத்து, 2032-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு லட்சம் கோடி டாலர் வரையிலான இழப்பை ஏற்படுத்தக்கூடும். அதேவேளையில், உலகளாவிய பொருளாதார இழப்பு 10 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாக இருக்கக்கூடும்.
