மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வு
ஏப்ரல் மாதத்தில் உபரியாக இருந்த இந்தியாவின் நடப்புக் கணக்கு, மே மாதத்தில் பற்றாக்குறைக்குச் சரிந்தது. அதே நேரத்தில், மூலதனக் கணக்குப் பற்றாக்குறை குறைந்தது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதாந்திர செலுத்து இருப்புத் தரவுகள் காட்டுகின்றன.
ஒட்டுமொத்தமாக, நிதியாண்டின் முதல் மாதத்தில் 660 கோடி டாலர் பற்றாக்குறையாக இருந்த செலுத்து இருப்பு, மே மாதத்தில் 440 கோடி டாலர் பற்றாக்குறையில் நீடித்தது. இதற்கு, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை சீர்குலைத்து இரண்டாம் நிலை பணவீக்க அபாயத்தைத் தூண்டிய மேற்கு ஆசிய மோதலே காரணமாகும்.
ஏப்ரல் மாதத்தில் 470 கோடி டாலர் உபரியாக இருந்த நாட்டின் நடப்புக் கணக்கு, மே மாதத்தில் 200 கோடி டாலர் பற்றாக்குறையில் இருந்தது. இதற்கு, 2,790 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறையானது, வெளிநாட்டிலிருந்து வரும் பணப் பரிமாற்ற வரவு மற்றும் சேவைத் துறையில் ஏற்பட்ட உபரியை ஈடுசெய்ததே காரணமாகும்.
சேவைத் துறையில் 1,570 கோடி டாலர் உபரி இருந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் பணப் பரிமாற்றங்கள், வெளிநாட்டு உதவிகள், ஓய்வூதியம் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிகரப் பரிமாற்றங்கள் 1,360 கோடி டாலராக இருந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன.
மூலதனக் கணக்கைப் பொறுத்தவரை, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் உள்ளூர் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை வெளியேற்றும் வேகத்தைக் குறைத்ததால், ஏப்ரல் மாதத்தில் இருந்த $1,130 கோடி பற்றாக்குறை, மே மாதத்தில் $240 கோடியாக குறைந்தது.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட இடர் தவிர்ப்பு மனப்பான்மையால், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்தில் $870 கோடி அளவுக்கு நிகர விற்பனை செய்த நிலையில், மே மாதத்தில் நிகரமாக $470 கோடி முதலீடுகளை வெளியே எடுத்தனர்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் $740 கோடி நிகர உள்வரவுகள் இருந்த நிலையில், மே மாதத்தில், அன்னிய முதலீட்டார்களின் நிகர விற்பனை $10 கோடி அளவுக்கு நிகர வெளிநாட்டு நேரடி முதலீட்டு வெளிப்பாய்வு இருந்தது என ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
