சுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்
அமெரிக்க வட்டி விகிதங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) செயல்பாடுகளில் தலையிட முயற்சிக்கவில்லை என்றும், அப்படி முயற்சித்தாலும் அதில் வெற்றி பெற முடியாது என்றும் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் கூறினார்.
ஃபெடரல் ரிசர்வ் பொறுப்பை ஏற்றதிலிருந்து டிரம்புடன் தொடர்பு கொண்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, புதன்கிழமையன்று நடைபெற்ற செனட் வங்கிக்குழு விசாரணையில் பதிலளித்த வார்ஷ், “அதிபருக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை நான் கொண்டிருக்க விரும்பவில்லை” என்று கூறினார்.
“அதிபரிடமும் கருவூலச் செயலாளரிடமும் நான் பலமுறை கூறியதை உங்களிடமும் சொல்கிறேன்: ஒரு சுதந்திரமான பணியைச் செய்வதற்கு அவர்கள் ஒரு சுதந்திரமான நபரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்; அதைத்தான் நான் சரியாகச் செய்யத் திட்டமிட்டுள்ளேன்,” என்று வார்ஷ் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் வான் ஹாலனின் தொடர் கேள்விகளுக்குப் பதிலளித்த வார்ஷ், “நான் இந்தப் பதவியை ஏற்பதற்கு முன்போ அல்லது பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்போ, பணவியல் கொள்கை செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்த அதிபர் முயற்சிக்கவில்லை” என்று கூறினார்.
“அவர் அப்படி முயற்சித்தாலும், நான் எதையும் பொருட்படுத்தாமல் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.
தனது பணி அட்டவணையை வெளியிடுவது தொடர்பாக முந்தைய நடைமுறைகளையே பின்பற்றுவதாகவும் வார்ஷ் கூறினார்.
டிரம்பால் ஃபெடரல் ரிசர்வ் தலைவராகப் பரிந்துரைக்கப்பட்ட வார்ஷ், மே மாதம் அப்பதவியை ஏற்றார். அவரது தலைமையின் கீழ் கடந்த மாதம் நடைபெற்ற முதல் கொள்கைக் கூட்டத்தில், ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் விலைவாசி உயர்வுக்கான அழுத்தங்கள் இருந்தபோதிலும், மத்திய வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்த வாரம் வெளியான அரசுத் தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் விலை பணவீக்க அளவுகள் குறைந்திருந்தாலும், பணவீக்கமானது ஃபெடரல் ரிசர்வ் நிர்ணயித்துள்ள 2 சதவீத இலக்கை விட அதிகமாகவே உள்ளது.
வார்ஷ் “முந்தைய நடைமுறைகளைப் பின்பற்றுவார்” என்று நம்புவதாக வான் ஹாலன் கூறினார்.
