வணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்
முன்னணி மின்சார வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான யூலர் மோட்டார்ஸ், ஹரியானாவின் பால்வாலில் உள்ள அதன் உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவதாக வியாழக்கிழமை அறிவித்தது. நான்கு சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விரிவாக்கப் பணிக்காக ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 24,000 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், யூலர் டர்போ EV 1000 மற்றும் ஸ்டார்ம் EV ஆகிய வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
யூலர் மோட்டார்ஸின் தலைமை நிர்வாகக் குழுவினரின் முன்னிலையில், ஹீரோ மோடோகார்பின் நிர்வாகத் தலைவர் பவன் முஞ்சால் இந்த ஆலையைத் திறந்து வைத்தார். ஹீரோ மோடோகார்ப் நிறுவனம், யூலர் மோட்டார்ஸில் சுமார் 36 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது.
“அரசாங்கத்தின் ஆதரவான கொள்கைகள், மேம்பட்ட பொருளாதாரச் சூழல் மற்றும் நிலையான கடைசி மைல் போக்குவரத்துக்கான வளர்ந்து வரும் தேவை ஆகியவற்றால் மின்மயமாக்கல் வேகம் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் வணிகப் போக்குவரத்துத் துறை ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. யூலர் மோட்டார்ஸ் மீதான எங்களின் இந்த உத்திசார் முதலீடு, அந்நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் திறன்கள் மீதான எங்கள் நம்பிக்கையையும், அதே வேளையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் மின்சார வாகனச் சூழலமைப்பின் பரந்த ஆற்றல் மீதான எங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது” என்று முஞ்சால் கூறினார்.
வணிக வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் செயல்திறன், பொருளாதாரச் சிக்கனம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை மின்சார வாகனங்களால் வழங்க முடியும் என்பதை யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் நிரூபித்துள்ளது என்றும், இந்த ஆலையின் மூலம் அந்தச் சிறப்பம்சங்களை மிகப்பரிய அளவில் கொண்டு செல்ல யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எங்களின் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் பலங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், வலுவான மின்சார வாகனச் சூழலமைப்பை உருவாக்கவும், இந்தியாவில் தூய்மையான, புத்திசாலித்தனமான மற்றும் திறமையான வணிகப் போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்தவும் நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றும் முஞ்சால் மேலும் கூறினார்.
