மருத்துவ விடுப்பில் செல்லும் மணப்புரம் ஃபைனான்ஸ் தலைமை நிர்வாகி
வங்கி சாரா நிதி நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ், அதன் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ரெட்டி பிப்ரவரி 25 முதல் மருத்துவ விடுப்பில் இருப்பார் என்று கூறியதை அடுத்து, அதன் பங்குகள் நேற்று, வர்த்கத்தின் நடுவே 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
பங்கு சந்தையில் இந்நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தீபக் ரெட்டி, மருத்துவ சிகிச்சையின் முன்னேற்றத்தைப் பொறுத்து, 90 முதல் 120 நாட்கள் வரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விடுப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க நிதி நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்கிற்கு ரூ.293.10 என முடிவடைந்தது. இது அதன் முந்தைய முடிவை விட 1.2 சதவீதம் குறைவு.
சமீபத்தில், மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் தனியார் ஈக்விட்டி நிறுவனமான பெய்ன் கேபிடல் நிறுவனம் முதலீடு செய்வதற்கு, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை இந்நிறுவனம் பெற்றது. பெயின் கேபிடல் நிறுவனம், 18 சதவீத பங்குகளுக்கு ரூ.4,385 கோடியை இதில் முதலீடு செய்யும். இந்த பரிவர்த்தனை, இந்நிறுவனத்தில் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கான கட்டாய திறந்த கொள்முதல் திட்டத்தை தொடங்கி வைக்கும். அதைத் தொடர்ந்து பெயின் கேபிட்டலின் முதலீட்டிற்குப் பிந்தைய பங்கு இந்நிறுவனத்தில் 18 சதவீதம் முதல் 41.7 சதவீதம் வரை இருக்கும்.
முதலீட்டிற்குப் பின்பு, இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக பெயின் கேபிடல் வகைப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள நிறுவனர்களுடன் இணைந்து இந்நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும். மேலும், மணப்புரம் நிதி மற்றும் குழு நிறுவனங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற முக்கிய நிர்வாக அதிகாரிகள் போன்ற பதவிகளுக்கு, நியமனங்களை பரிந்துரைக்கும் உரிமையை பெயின் கேபிடல் கொண்டிருக்கும். மணப்புரம் ஃபைனான்ஸின் மறுசீரமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் பெயினுக்கு இரண்டு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் இருப்பார்கள்.
