NRTT பங்கு பரிமாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து டாடா டிரஸ்ட்ஸ்க்கு ஒப்புதல்
1989-ஆம் ஆண்டில் நவஜ்பாய் ரத்தன் டாடா டிரஸ்ட் (NRTT) அமைப்பிலிருந்து மறைந்த நேவல் ஹெச் டாடாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பங்கு பரிமாற்றங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், டாடா டிரஸ்ட்ஸ்க்கு மகாராஷ்டிர மாநில தொண்டு நிறுவனங்களுக்கான ஆணையர் நற்சான்றிதழ் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கை முடித்து வைக்கும்போது, மகாராஷ்டிர பொது அறக்கட்டளைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் இப்பங்கு பரிமாற்றம் குறித்து இனி எந்த விசாரணையும் தேவையில்லை என்று ஆணையர் அமோக் கலோடி கருத்து தெரிவித்தார்.
டாடா சன்ஸ் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரரான டாடா டிரஸ்ட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில், டாடா குழுமம் ஒரு தலைமைத்துவ நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
டாடா டிரஸ்ட்ஸால் ‘தொடர்ந்து வழக்கு தொடரும் நபர் என்று குறிப்பிடப்பட்ட சுரேஷ் படில்கேடே, NRTT மற்றும் நேவல் ஹெச் டாடா ஆகியோருக்கு இடையே 833 பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை கோரி ஜூன் மாதத்தில் தொண்டு நிறுவனங்களுக்கான ஆணையர் அலுவலகத்தை அணுகினார். அதைத் தொடர்ந்து, NRTT-யிலிருந்து நேவல் ஹெச் டாடாவுக்கு டாடா சன்ஸின் 833 பங்குகள் மாற்றப்பட்டது தொடர்பான சட்ட அறிவிப்பைப் பெற்ற டாடா டிரஸ்ட்ஸின் துணைத் தலைவரும் NRTT-யின் அறங்காவலருமான விஜய் சிங், 35 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அந்தப் பரிவர்த்தனையின் “சட்டப்பூர்வமான தன்மை மற்றும் முறையான நடைமுறை” குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தார். சட்டவிரோத பங்கு பரிமாற்றக் குற்றச்சாட்டுகளைத் தான் உட்பட அறங்காவலர்களின் ஒப்புதலுடன் டாடா டிரஸ்ட்ஸ் மறுத்திருந்தாலும், தனிநபர் எவர் மீதும் களங்கம் விளைவிக்காமல் இவ்விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவது, தற்போது செய்திகளில் இடம்பெற்றுள்ள இப்பிரச்சினைக்குத் தெளிவை அளிக்கும் என்று ஆணையர் அலுவலகத்திற்கு அவர் அளித்த குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
NRTT என்பது சர் ரத்தன் டாடாவின் மனைவியான லேடி நவஜ்பாய் டாடாவின் நினைவாக 1974-இல் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். நேவல் ஹெச் டாடா என்பவர் ரத்தன் டாடா, ஜிம்மி டாடா மற்றும் நோயல் டாடா ஆகியோரின் தந்தையாவார்.
