குறைந்த வட்டி டெப்பாசிட்கள் மூலம் உலக சந்தையை மிரட்டும் சீன வங்கிகள்
குறைந்த வட்டியில் திரட்டப்பட்ட டெப்பாசிட்கள் மற்றும் நிதிகளால் நிரம்பி வழியும் சீன வங்கிகள், உலகளாவிய கடன் சந்தையின் சில பகுதிகளை மறுவடிவமைத்து வருகின்றன.
மலிவான சீன போட்டியாளர்களால் பாதிக்கபடுவதாக நீண்ட காலமாக புகார் அளித்து வரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உற்பத்தியாளர்களைப் போலவே, உலகளாவிய வங்கியாளர்களும் இப்போது நிதித் துறையில் இதே போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வதாகக் கூறுகிறார்கள். சீன வங்கிகள் உலக அளவில் மலிவான கடன்களை வழங்குவதால், அவற்றுடன் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
மெதுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ள சீன அரசு வட்டி விகிதங்களை குறைத்து, பண புழக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனால் உந்தப்படும் சீன வங்கிகள், உள்நாட்டு கடன் தேவை பலவீனமடைந்து வரும் நிலையில், வெளிநாட்டுக் கடன்களை விரிவுபடுத்துகின்றன. ஈரான் போரினால் உலக அளவில் எரிசக்தி விலைகள் உயர்வது, முக்கிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தள்ளி வைக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது சீன வங்கிகளுக்கு மேலும் அதிக உந்துதலை அளிக்கும்.
“சீன வங்கிகள் ஆசியாவின் கடன் சந்தையில் அதிக பணப்புழக்கம் மற்றும் போட்டியை செலுத்துகின்றன. மேலும் மிகப் பெரிய வெளிநாட்டு வங்கிகளுக்கு, இது பாதிப்பை ஏற்படுத்தும்” என்று நாடிக்சிஸ் SA க்கான ஆசிய பசிபிக் தலைமை பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா-ஹெர்ரெரோ கூறியுள்ளார். இதன் விளைவாக, உள்கட்டமைப்பு மற்றும் பண்டங்கள் போன்ற துறைகளில், சர்வதேச நிதி நிறுவனங்களின் டாலர் கடன்களின் பங்கு குறையக்கூடும் என்று அவர் கூறினார்.
சீன வங்கிகள், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திப்பது, முன்கூட்டியே மறுநிதியளிப்பைத் தொடங்குவது மற்றும் திருப்பிச் செலுத்தும் காலங்களை நீட்டிப்பது போன்றவற்றால் அந்த பாதிப்புகள் ஏற்கனவே தெளிவாகத் தெரிவதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நவம்பரில், ஒரு தனியார் பங்கு நிறுவனம் ஸ்டார்பக்ஸ் கார்ப் நிறுவனத்தின் சீன சில்லறை வணிகத்தில் பங்குகளை வாங்குவதற்கு, சீன வங்கிகள் சுமார் $140 கோடி அளவுக்கு கடன் அளித்தனர். யுவான் அடிப்படையிலான இந்த கடன் 10 ஆண்டு முதிர்ச்சியைக் கொண்டுள்ளது. பெரும்பாலான உலகளாவிய வங்கிகள் அளிக்கும் கால அவகாசத்தை விட இது அதிகமாகும்.
