UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஈரானிடமிருந்து வந்த 15 ஏவுகணைகளையும் நான்கு ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும், துரோகத்தனமான இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையைத் தன்னிடம் வைத்திருப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியது. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரானிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வரவில்லை.
இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான அமெரிக்க நடவடிக்கையான ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தின் போது, வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் தலையிட முயன்ற ஆறு ஈரானிய சிறிய படகுகளை மூழ்கடித்ததாக அமெரிக்க இராணுவம் கூறியது. இந்தச் செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.
‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அது “பூமியின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படும்” என்றும், போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ஈரான் நம்ப வேண்டும் என்றும் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்று முதல் துணை ஜனாதிபதி முகமது ரெசா அரேஃப் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களை, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உறுப்பு நாட்டின் “இறையாண்மையின் அப்பட்டமான மீறல்” என்று ஜிசிசி பொதுச்செயலாளர் ஜாசெம் முகமது அல்பூதைவி கண்டித்தார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது தொடர்ச்சியான முற்றுகைக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, இன்றுவரை 50 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய சந்தைகளில் விநியோக அழுத்தங்கள் குறித்த கவலைகள் எதிரொலித்ததால், பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 5.8% உயர்ந்து, ஒரு பீப்பாய் $114.44 ஆக (6.27 டாலர் உயர்வு) அதிகரித்தது.
“ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதுதான் இன்று டிரம்பின் பிரச்சினை. 40 நாள் போரின்போதும் அதற்குப் பின்னரும் அவர் ஒவ்வொரு கதவையும் தட்டினார், ஆனால் எந்தப் பயனும் இல்லை,” என்று ஜவானி ஈரானின் ISNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஈரான் மீது “அழுத்தம் கொடுப்பதன்” மூலம் அமெரிக்கத் தலைவர் நீர்வழியைத் திறக்க முயல்கிறார் என்று அவர் கூறினார்.
