50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்
என்விடியா மற்றும் தென் கொரியாவின் SK குரூப் ஆகியவை இணைந்து, பெரிய அளவிலான AI டேடா மையங்கள் மற்றும் அடுத்த தலைமுறை மெமரி தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 50,000 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்பிலான AI திட்டத்தை அறிவித்தன.
இத்திட்டத்தில் SK ஹைனிக்ஸ் உடனான நீண்டகாலக் கூட்டுமுயற்சியும் அடங்கும். இதன் மூலம் என்விடியாவிற்குத் தேவையான அடுத்த தலைமுறை மெமரி விநியோகம் உறுதிசெய்யப்படுவதுடன், AI பயிற்சி, AI ஏஜெண்டுகள் மற்றும் இயற்பியல் சார்ந்த AI பயன்பாடுகளுக்கான அதிக அலைவரிசை கொண்ட மெமரி ஆகியவை கூட்டாக உருவாக்கப்படும்.
இதற்கிடையில், என்விடியாவின் வெரா ரூபின் சிப்கள் மற்றும் SK ஹைனிக்ஸின் ‘HBM4’ உயர்-அலைவரிசை மெமரி ஆகியவற்றைக் கொண்டு 2-ஜிகாவாட் திறன் கொண்ட AI தரவு மையத்தை உருவாக்க SK டெலிகாம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் மையம் 2027-ல் செயல்பாட்டுக்கு வரும் என்று என்விடியா மேலும் தெரிவித்தது.
“உலகத்தரம் வாய்ந்த நெட்வொர்க்குகள் மற்றும் டேடா மையங்கள், சிப் தொழில்நுட்பத்தில் தலைமைத்துவம் மற்றும் பரந்த அளவிலான தொழில்துறை கட்டமைப்பு என, ஒரு உலகளாவிய AI சக்தியாக மாறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் தென் கொரியாவிடம் உள்ளன,” என்று என்விடியாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சென் ஹுவாங் கூறினார். “SK டெலிகாம் மற்றும் SK ஹைனிக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, கொரியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய தலைமுறை AI தொழிற்சாலைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்றார்.
“இது கொரியாவிற்கு ஒரு பொற்காலம். அவர்களின் செமி கண்டக்டர் வணிகம் மற்றும் தொழில்துறை வணிகம் ஆகியவை மிகச் சிறப்பாக வளர்ந்து வருகின்றன. உலகிற்குத் தேவையான AI உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் திறன் கொண்ட நாடாக இது திகழ்கிறது” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில், SK குரூப்பின் தலைவர் சே டே வொன் குறிப்பிடுகையில், “AI காலத்தில், போட்டித்திறன் என்பது AI-ஐ எவ்வளவு திறம்படப் பயன்படுத்துகிறோம் என்பதில் மட்டுமல்ல, எவ்வளவு நுண்ணறிவை நம்மால் உருவாக்க முடிகிறது என்பதிலும் உள்ளது” என்றார்.
“SK ஹைனிக்ஸின் AI மெமரி மற்றும் SK டெலிகாமின் AI உள்கட்டமைப்புத் திறன்களைப் பயன்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த AI தொழிற்சாலையை உருவாக்க SK நிறுவனம் என்விடியாவுடன் இணைந்து செயல்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
