தைவானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்த அமெரிக்கா
அமெரிக்காவின் டிரம்ப் அரசு, தைவானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. தைவான் அதன் 99% இறக்குமதி தடைகளை நீக்க அல்லது குறைக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர் சிப்கள் உற்பத்திக்கு அமெரிக்கா தைவானையே நம்பியிருப்பதால் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இதன் ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் கிட்டத்தட்ட $12,700 கோடி அளவுக்கு வர்த்தக பற்றாக்குறைக்கு பங்களித்தது.
அமெரிக்காவிற்கு தைவானின் ஏற்றுமதிகள் 15% விகிதத்தில் அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் “மிகவும் விரும்பப்படும் நாடு” விகிதத்தில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று USTR அலுவலகம் தெரிவித்துள்ளது. 15% விகிதம் ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி விகிதத்திற்கு சமமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் மற்றும் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோர் கலந்து கொண்டனர். தைவானின் துணைப் பிரதமர் லி-சியுன் செங் மற்றும் அதன் அரசாங்க அமைச்சர் ஜென்-நி யாங் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஜனாதிபதி டிரம்பின் தலைமை, ஆசியா முழுவதும் முக்கியமான கூட்டாளிகளுடன், அமெரிக்காவிற்கு வளமான வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து உருவாக்குகிறது. அதே நேரத்தில் அமெரிக்க மக்களின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துகிறது” என்று கிரேர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கம்ப்யூட்டர் சிப்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் எரிசக்தி போன்ற அமெரிக்க தொழில்களில், தைவான் 25,000 கோடி டாலர் முதலீடு செய்யும். அமெரிக்காவில் சிறு நிறுவனங்கள் முதலீடு செய்ய உதவும் வகையில் கூடுதலாக 25,000 கோடி டாலர்கள் வரை கடன் உத்தரவாதங்களை வழங்குவதாக தைவான் அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு, தைவானில் ஆட்டோமோபைல்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை எளிதாக்கும். அதே சமயத்தில் தைவான் நிறுவனங்கள் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிப்பில் முதலீடு செய்யும். இது வர்த்தக ஏற்றத்தாழ்வைத் தணிக்க உதவும்.
