டிரம்ப் எடுத்த முடிவு.. பார்மா கம்பெனிகள் குஷி…
ஜெனிரிக் ரக (காப்புரிமை இல்லாத) மருந்துகளுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றுள்ளார்.
இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ஆகஸ்ட்டில் 50% ஆக டிரம்ப் உயர்த்தியிருந்தார். ஜெனிரிக் ரக மருந்துகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜெனிரிக் ரக மருந்துகளுக்கும் 50% இறக்குமதி வரி விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அமெரிக்க அரசின் வணிகத் துறை ஆய்வு மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஜெனிரிக் ரக மருந்துகள் மீது 50% இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் கைவிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் விற்பனையாகும் மருந்துகளில் ஜெனிரிக் ரக மருந்துகளின் விகிதம் ஏறக்குறைய 50% உள்ளது. இது பெருமளவில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம், குடல் புண்கள், கொலஸ்ட்ரால் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மலிவு விலை ஜெனிரிக் ரக மருந்துகளை பெற, பல கோடி அமெரிக்கர்கள் இந்தியாவை நம்பியுள்ளனர்.
இந்நிலையில் ஜெனிரிக் மருந்துகள் மீது 50% இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் கைவிட்டுள்ளது இவர்களுக்கும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிம்மதி அளிக்கும்.
உலகின் மிக பெரிய மருந்து தயாரிப்பு மையம் என்று கருதப்படும் இந்தியா, அமெரிக்காவின் ஜெனெரிக் மருந்துகள் சந்தையில் 47% பங்கினை கொண்டுள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்த சந்தையில் 30% மட்டுமே கொண்டுள்ளன. இதர நாடுகளின் பங்களிப்பும் குறைவாகவே உள்ளது
