இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5%ஆக உயர்வு
இந்தியாவில் வேலையின்மை விகிதம் (UR) டிசம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து ஜனவரி மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளி விவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு 3.73 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், ஜனவரி மாதத்தில் வேலையின்மை ஓரளவு அதிகரிப்பைப் பதிவு செய்தது.
ஜனவரி மாதத்தில் LFPR மற்றும் WPR சரிவு மற்றும் UR உயர்வு ஆகியவை முதன்மையாக கிராமப்புறங்களால் இயக்கப்படுகின்றன என்றும், பருவகால காரணிகள், அறுவடைக்குப் பிந்தைய மந்தநிலை மற்றும் ஊக்கமின்மை விளைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் புள்ளிவிவர அமைச்சகத்தின் அறிக்கை கூறியது. “கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிகள், போக்குவரத்து, சிறு வணிகம் போன்ற பல நடவடிக்கைகள் குளிர்காலத்தில் மெதுவாகவே இருக்கும். நகர்ப்புறங்கள் நிலையாகவே இருந்தன” என்று அது விளக்கியது.
டிசம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை கிராமப்புற UR 3.9 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நகர்ப்புற UR 6.7 சதவீதத்திலிருந்து 7.0 சதவீதமாக அதிகரித்தது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களில், UR 2026 ஜனவரியில் நிலையானதாக இருந்தது. இதற்கு நேர்மாறாக, அதே வயதுடைய பெண்களிடையே வேலையின்மை டிசம்பர் 2025 ஐ விட ஜனவரி 2026 இல் அதிகமாக இருந்தது.
ஜனவரி மாதத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 35.1 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.7 சதவீதமாக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் அவர்களின் பங்களிப்பு கடந்த மாதம் 25.5 சதவீதமாக இருந்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஓரளவு வேறுபாடுகளுடன் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மாறாமல் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே ஒட்டுமொத்த தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் (WPR) ஜனவரி 2026 இல் நிலையானதாக இருந்தது. ஜூன் 2025 முதல் டிசம்பர் 2025 வரை (56.7 சதவீதம்) கிராமப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம் படிப்படியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, அது ஜனவரி 2026 இல் 56.2 சதவீதமாகக் குறைந்தது.
