இந்திய சூரிய சக்தி பேனல்களுக்கு 126% இறக்குமதி வரி விதித்த டிரம்ப் அரசு
சூரிய சக்தி பேனல்கள் உற்பத்திக்கு இந்திய அரசு அதீத அளவு மானியம் அளிப்பதாக கூறி, டிரம்ப் அரசு இவற்றின் மீது 126 சதவீத இறக்குமதி வரிகளை முதல் கட்டமாக விதித்துள்ளது.
இதே போல இந்தோனேசியாவின் சோலார் பேன்லகள் மீதான முதல் கட்ட இறக்குமதி வரியை 86 சதவீதத்திலிருந்து 143 சதவீதம் வரையிலும், லாவோஸுக்கு 81 சதவீதமாகவும் டிரம்ப் அரசு விதித்துள்ளது. இந்த 3 நாடுகளின் சோலார் பேனல் உற்பத்தியாளர்களுக்கு அந்நாட்டு அரசுகள் அளிக்கும் மொத்த மானியங்களின் அடிப்படையில் இந்த வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மானியங்களின் உதவியுடன், மலிவு விலையில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, அதன் விளைவாக அமெரிக்காவின் சோலார் பேனல் உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக டிரம்ப் அரசு கூறியுள்ளது.
இந்த இறக்குமதி வரிகள் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் இருந்தாலும், அவை இந்த துறையில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்து, மின்சார உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த புதிய வரிகள், கடந்த வாரம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த டிரம்பின் உலகளாவிய வரிகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். இதை தொடர்ந்து வேறு ஒரு விதிமுறையின் கீழ், டிரம்ப் உலக நாடுகள் மீது 15% இறக்குமதி வரியை அடுத்த 150 நாட்களுக்கு விதித்தார்.
2025இன் முதல் பாதியில் அமெரிக்காவின் சோலார் மாட்யூல் இறக்குமதிகளில் இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் 57 சதவீதத்தை வகித்ததாக ப்ளூம்பெர்க்NEF தெரிவித்துள்ளது. இறக்குமதியில் பெரும்பகுதியைக் கொண்டிருந்த நான்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா ஒரு கட்டத்தில் அதிக வரிகளை விதித்த பிறகு, சில இறக்குமதியாளர்கள் வேறு நாடுகளுக்கு மாறினர்.
2024இல் இந்தியாவிலிருந்து சூரிய சக்தி உபகரணங்கள் இறக்குமதி $79.26 கோடியாக மதிப்பிடப்பட்டது. இது 2022இல் இருந்த மதிப்பை விட 9 மடங்கு அதிகம் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக வரி விகிதங்கள், இந்திய சூரிய சக்தி பேனல் உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க சந்தையை பெரும்பாலும் கிடைக்காமல் செய்யும் என்று சிட்டி வங்கியின் ஆய்வாளர் விக்ரம் பாக்ரி தெரிவித்துள்ளார்.
