ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48 சதவீதமாக அதிகரிப்பு
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட தொடர் உயர்வால் உந்தப்பட்டு, சில்லறை பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக அதிகரித்து, ஏப்ரல் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத உச்சமாக 3.48 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த உயர்வு இருந்த போதிலும், பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கிற்கு கணிசமாகக் குறைவாகவே உள்ளது; இது வட்டி விகிதங்களில் தற்போதைய நிலையையே தொடர ரிசர்வ் வங்கிக்கு வலுவான ஒரு காரணமாக அமைகிறது.
மார்ச் மாதத்தில் பணவீக்க விகிதம் 3.4 சதவீதமாக இருந்தது. நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் முக்கிய அங்கமான உணவுப் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 3.87 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 4.2 சதவீதமாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் வெள்ளி நகைகளுக்கான பணவீக்க விகிதம் 144 சதவீதத்திற்கும் அதிகமாகவும், தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கான பணவீக்க விகிதம் 40 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
பிரிகொர்க் ரேட்டிங்க்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் ராஜீவ் சரண் கருத்துப்படி, அடிப்படைப் பணவீக்கம் 3.3 சதவீதத்தில் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டிலேயே உள்ளது; வீட்டுவசதி (2.15%), சுகாதாரம் (1.64%), வீட்டு உபயோகப் பொருட்கள் (1.61%) மற்றும் உணவு அல்லாத பிற பிரிவுகள் மிதமான விலை மாற்றங்களையே காட்டுகின்றன. இருப்பினும், சரக்கு போக்குவரத்து மற்றும் உரச் சந்தைகளில் ஏற்கனவே தென்படும் அதிகப்படியான போக்குவரத்து மற்றும் உள்ளீட்டுச் செலவுகள், உணவு அல்லாத பிற பிரிவுகளுக்கும் பரவுமானால், தற்போதுள்ள இந்த விலை மிதத்தன்மை நிலையற்றதாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
HDFC வங்கியின் முதன்மைப் பொருளாதார நிபுணர் சாக்ஷி குப்தா கூறுகையில், ஏப்ரல் மாதத்தின் ஒட்டுமொத்த பணவீக்க விவரங்கள், உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் மத்திய வங்கிக்கு ஒரு சாதகமான தொடக்கப் புள்ளியை வழங்கினாலும், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் ஒரு முக்கிய அபாயமாகத் தொடர்கின்றன என்றார். கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமாகி வரும் நிலையில், எரிபொருள் விற்பனை நிலையங்களில் விலையேற்றம் ஏற்படுவது பணவீக்கத்தின் மீது நேரடி மற்றும் மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று குப்தா எச்சரித்தார்.
இநிலையில் அனைவரின் பார்வையும் இப்போது, அடுத்த மாதத் தொடக்கத்தில் கூடவுள்ள ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் மீது திரும்பியுள்ளது.
