AI சர்வர்களின் விலைகளை 15% உயர்த்த திட்டமிடும் என்விடியா
சிப் தயாரிப்பாளரான என்விடியா, அதன் செயற்கை நுண்ணறிவு (AI) சிப்களைக் கொண்ட சர்வர்களின் விலைகளை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்தப் போவதாக அதன் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் சிலருக்கு அறிவித்துள்ளது. மெமரி சிப்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுப்பப்படவுள்ள கணினிகளுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும், முதன்மை சிப்களான வேரா ரூபின் மற்றும் கிரேஸ் பிளாக்வெல் ஆகியவற்றைக் கொண்ட கணினிகள் உட்பட பலவற்றில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வானது என்விடியா சிப்களின் தலைமுறை மற்றும் மெமரி உள்ளமைப்புகளைப் பொறுத்து அமையும்.
மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் ஆரக்கிள் உள்ளிட்ட முக்கிய டேடா மைய நிறுவனங்களுக்கு சர்வர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பந்த உற்பத்தியாளர்கள், வரவிருக்கும் இந்த விலை உயர்வுகள் குறித்து சமீபத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கான தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனத்தால் தற்போதைய விலைகளைத் தக்கவைக்கவோ அல்லது அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்கவோ முடியவில்லை என்பது, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், எஸ்.கே. ஹைனிக்ஸ் மற்றும் மைக்ரான் டெக்னாலஜி போன்ற மெமரி சிப் தயாரிப்பாளர்களின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. சிப் பற்றாக்குறை காரணமாகத் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் மற்றும் குவால்காம் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை உருவாக்கவும் இயக்கவும் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு என்விடியாவின் ஆக்சிலரேட்டர் செயலிகள் மையமாக உள்ளன. அவற்றின் செயல்திறன், அவற்றுடன் இணைக்கப்படும் டைனமிக் ரேண்டம்-ஆக்சஸ் மெமரியின் (DRAM) அளவைப் பெரிதும் சார்ந்துள்ளது. சாம்சங், எஸ்.கே. ஹைனிக்ஸ் மற்றும் மைக்ரான் ஆகியவை உலகளாவிய DRAM உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தி வந்தாலும், வேகமாக அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப விநியோகம் இன்னும் அதிகரிக்கவில்லை. இதன் விளைவாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தக் கூறுகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது, தொழில்நுட்பத் துறை முழுவதும் மெமரி சிப் தயாரிப்பாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத செல்வாக்கைக் கொடுத்துள்ளது.
