அமெரிக்காவின் புதிய சுத்தீகரப்பு ஆலையில் பங்கெடுக்கும் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் கட்டமைக்கப்படும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கட்டுவதில் முதலீடு செய்கிறது. இது டெக்சாஸில் உள்ள பிரவுன்ஸ்வில்லே துறைமுகத்தில் திட்டமிடப்பட்டுள்ள 30,000 கோடி டாலர் திட்டம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியது மற்றும் அமெரிக்க எரிசக்தி உற்பத்திக்கு ஒரு பெரிய ஊக்கம் என்று கூறினார்.
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இந்த திட்டத்தை அறிவித்த டிரம்ப், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முதலீட்டு ஆதரவுடன் அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கும் என்று கூறினார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த மகத்தான முதலீட்டிற்கு நன்றி தெரிவித்தார்”.
ஆனால் டிரம்பின் கூற்றை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், புதன்கிழமை BSE-யில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்து, ரூ.1,434 ஆக உயர்ந்தன.
வளைகுடா கடற்கரையின் முக்கிய கப்பல் மையமான பிரவுன்ஸ்வில்லி பகுதியில் இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும். மேலும் இது உள்நாட்டு சந்தைகளுக்கு எரிபொருளை வழங்கும் அதே வேளையில் அமெரிக்காவிலிருந்து உலகளாவிய எரிசக்தி ஏற்றுமதியையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”பிரவுன்ஸ்வில்லி துறைமுகத்தில் ஒரு புதிய சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்க சந்தைகளுக்கு எரிபொருள் வழங்கும். நமது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும், அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும், பொருளாதார தாக்கத்தில் பல ஆயிரம் கோடிக்கணக்கான டாலர்களை வழங்கும்”என்று டிரம்ப் தனது பதிவில் கூறினார்.
இந்த ஆலை சுற்றுச்சூழல் ரீதியாக மேம்பட்டதாக இருக்கும் என்றும், அதை உலகின் மிகத் தூய்மையான சுத்திகரிப்பு நிலையம் என்றும் அவர் கூறினார்.
”இது உலகளாவிய ஏற்றுமதிகளுக்கு சக்தி அளிக்கும். மேலும் ஆயிரக்கணக்கான நீண்டகால வேலைகள் மற்றும் வளர்ச்சியை அதற்கு தகுதியான ஒரு பிராந்தியத்திற்கு கொண்டு வரும்” என்று அவர் கூறினார்.
