இறக்குமதி கட்டுப்பாடுகளினால் உச்சமடையும் வெள்ளி விலை
உலகின் மிகப்பெரிய வெள்ளிச் சந்தையான இந்தியாவில், வெள்ளி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன. இதனால், வழக்கத்தை விடக் குறைவான தேவை இருந்த போதிலும், வெள்ளி மீதான ‘பிரீமியம்’ (அதிகரித்த விற்பனை விலை) கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தனது வெள்ளித் தேவையில் 80%-க்கும் அதிகமானவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் நாணயத்தின் மீதான அழுத்தத்தைத் தணிக்கவும் முடியும்; அதே சமயம் இது உலகளாவிய விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
“வெள்ளி இறக்குமதி கிட்டத்தட்ட நின்றுவிட்டதால், இந்தியச் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,” என்று முன்னணி வெள்ளி இறக்குமதியாளரான குஜராத்தைச் சேர்ந்த அம்ரபாலி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிராக் தாக்கர் கூறினார். “இதன் விளைவாக, உலகளாவிய விலையை விட கணிசமான கூடுதல் விலையில் (பிரீமியத்தில்) வெள்ளி வர்த்தகம் செய்யப்படுகிறது” என்றார்.
அதிகாரப்பூர்வ உள்நாட்டு விலையை விட வெள்ளி மீதான பிரீமியம் இந்த வாரம் ஒரு அவுன்ஸிற்கு 6.5 டாலராக (அதாவது அடிப்படை விலையை விட 10% அதிகமாக) உயர்ந்தது. ஒப்பிட்டுப் பார்க்கையில், மே மாதத்தில் ஒரு அவுன்ஸிற்கு 5.5 டாலர் வரை தள்ளுபடி விலையில் வெள்ளி விற்கப்பட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மே மாத மத்தியில், இந்தியா கிட்டத்தட்ட அனைத்து வகையான வெள்ளி இறக்குமதிகளையும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கட்டுப்படுத்தியது. ஜூன் மாதத்தில், வெள்ளித் துகள்கள் மற்றும் பொடி ஆகியவற்றையும் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்தும், இறக்குமதிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கியும் விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, வெள்ளி இறக்குமதி முந்தைய ஆண்டின் 534.3 டன்களிலிருந்து மே மாதத்தில் 46.8 மெட்ரிக் டன்களாகக் குறைந்தது.
மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் இந்தியாவின் வெள்ளி இறக்குமதி மேலும் குறைந்துள்ளதாக தாக்கர் கூறினார். அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், ரூபாயின் மதிப்பை ஆதரிக்கவும் விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இந்தியா சமீப மாதங்களில் முயற்சித்து வருகிறது.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை அரசு 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது.
