அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபை
உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு நெருக்கடியான தருணத்தில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்விற்கு புதிய தலைமையைக் கொண்டு வரும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த கெவின் வார்ஷை, செனட் சபை உறுதிப்படுத்தியது.
பெரும்பாலும் கட்சி அடிப்படையிலான வாக்கெடுப்பில், புதன்கிழமை வார்ஷ் உறுதிப்படுத்தப்பட்டார். ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் குறித்து நீதித்துறை விசாரித்து வந்த நிலையில், இந்த நியமனத்தைத் தடுப்பதாக வட கரோலினாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் தாம் டில்லிஸ் கூறியதைத் தொடர்ந்து, சமீப மாதங்களில் அவரது நியமனம் கேள்விக்குறியானது. பவல் மீதான விசாரணை ஏப்ரல் மாதம் கைவிடப்பட்டதால், வார்ஷை செனட் சபை உறுதிப்படுத்த வழிவகுத்தது.
புதன்கிழமை காலை அவையில் ஆற்றிய உரையில், செனட் பெரும்பான்மைத் தலைவர் ஜான் தூன், (குடியரசுக் கட்சி-தென் டகோட்டா), வார்ஷை ஆதரிக்குமாறு சக உறுப்பினர்களை வலியுறுத்தினார். ”ஒரு ஃபெடரல் ரிசர்வ் தலைவர் மேக்ரோ பொருளாதாரத்தை மட்டும் புரிந்து கொள்ளாமல், மைக்ரோ பொருளாதாரத்தையும் மதிக்க வேண்டும்: அதாவது கடினமாக உழைக்கும் அமெரிக்கர்கள், அவர்களின் வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்கள்” என்று அவர் கூறினார். “கெவின் வார்ஷ் அப்படிப்பட்ட ஒருவர்தான்,” என்று தூன் கூறினார்.
56 வயதான வார்ஷ், ஃபெடரல் ரிசர்வின் முன்னாள் உயர் அதிகாரி ஆவார். இந்த சுதந்திரமான அமைப்புக்கு மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தில் அவர் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, பணவீக்கமானது ஃபெடரல் ரிசர்வின் 2% இலக்கைத் தாண்டி உள்ளது. மேலும், கடுமையாக உயர்ந்து வரும் எரிவாயு விலைகள் காரணமாக தற்போது அது இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித நிர்ணயக் குழு பிளவுபட்டுள்ளது. கடந்த மாதம், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு அதிக எதிர்ப்பு வாக்குகளை அது பதிவு செய்தது. மேலும், குடியரசுக் கட்சி அதிபரிடமிருந்து பல ஆண்டுகளாக தனிப்பட்ட தாக்குதல்களையும், நீதித்துறையின் முன்னெப்போதும் இல்லாத சட்ட விசாரணையையும் சந்தித்த பிறகு, பவல் தனது தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னரும் ஃபெடரல் ரிசர்வின் வாரியத்தில் நீடிக்கத் திட்டமிட்டுள்ளார். இது ஒரு போட்டி அதிகார மையத்தை உருவாக்கும் சாத்தியம் உள்ளது.
