எலி லில்லி, இன்சிலிகோ மெடிசின் இடையே 275 கோடி டாலர் ஒப்பந்தம்
மருந்துத் துறையின் முன்னணி நிறுவனமான எலி லில்லி, ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இன்சிலிகோ மெடிசின் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, உலகச் சந்தைக்கு மருந்துகளைக் கொண்டு வருவதற்காக 275 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இன்சிலிகோ நிறுவனம் முன்பணமாக 11.5 கோடி டாலர்களைப் பெறும் என்றும், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் வணிகரீதியான மைல்கற்களைப் பொறுத்து கூடுதல் தொகைகளும், எதிர்கால விற்பனையில் இருந்து ராயல்டிகளும் வழங்கப்படும் என்றும் என்று இந்நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இன்சிலிகோ மெடிசின் நிறுவனத்தின், மருத்துவப் பரிசோதனைக்கு முந்தைய வாய்வழி மருந்துகளை உருவாக்கி, உற்பத்தி செய்யவும், வணிகமயமாக்குவதற்கும் பிரத்யேக உரிமத்தை லில்லி பெறும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்சிலிகோ மெடிசின் நிறுவனம் இதுவரை ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்தி குறைந்தது 28 மருந்துகளை உருவாக்கியுள்ளது என்றும், அவற்றில் ஏறக்குறைய பாதி மருந்துகள் ஏற்கனவே மருத்துவப் பரிசோதனை நிலையில் உள்ளன என்றும் இன்சிலிகோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் ஷவோரோன்கோவ் சிஎன்பிசியிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஹாங்காங்கில் பொதுப் பங்கு வெளியீடு செய்த அந்த நிறுவனத்தின் பங்குகள், இந்த ஆண்டு இதுவரை 50%க்கும் மேல் உயர்ந்துள்ளன. பல வழிகளில், லில்லி நிறுவனம் இன்சிலிகோவை விட சிறப்பாகச் செயல்படுகிறது என்று ஷவோரோன்கோவ் மேலும் கூறினார். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பயோ தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான லில்லியின் கேட்வே லேப்ஸ் சமூகத்தில் இன்சிலிகோ இணையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருள் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, லில்லியும் இன்சிலிகோவும் 2023 முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இன்சிலிகோ தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை சீனாவிற்கு வெளியே, முக்கியமாக கனடா மற்றும் மத்திய கிழக்கில் உருவாக்குகிறது, அதே நேரத்தில் அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆரம்பகட்ட மருத்துவத்திற்கு முந்தைய மருந்து மேம்பாட்டுப் பணிகளை சீனாவில் மேற்கொள்கிறது என்று ஷவோரோன்கோவ் கூறினார். ஆராய்ச்சி காலக்கெடுவைக் குறைப்பதைத் தாண்டி, பாரம்பரிய கண்டுபிடிப்பு முறைகளை விட செயற்கை நுண்ணறிவால் மூலக்கூறுகளை மிக வேகமாக உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
