IDFC First Bank மோசடி வழக்கில், சண்டிகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட CFO நளினி மாலிக் கைது
சண்டிகர் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ. 116 கோடிக்கும் அதிகமான நிதியை உள்ளடக்கிய IDFC First Bank மோசடி வழக்கில், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்’ (Smart City Project) தலைமை நிதி அதிகாரி (CFO) நளினி மாலிக்கை சண்டிகர் காவல்துறை கைது செய்தது.
ரூ. 116 கோடி மதிப்பிலான போலி டெப்பாசிட் ரசீதுகள் (FDRs) குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சண்டிகர் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) பதிவு செய்த வழக்கைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள IDFC First Bank மேலாளர் ரிபவ் ரிஷி என்பவர், நளினி மாலிக் மற்றும் ‘சண்டிகர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுச் சங்கத்தின்’ (CREST) திட்ட இயக்குனர் சுக்விந்தர் சிங் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, போலி நிறுவனங்களை (shell firms) உருவாக்கியதாகக் காவல்துறை சண்டிகர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மாநகராட்சி மற்றும் CREST அதிகாரிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (FIRs) தொடர்பாக, முன்னாள் IDFC அதிகாரிகள் ரிபவ் ரிஷி, அபய் குமார் மற்றும் சீமா திமான் ஆகியோரை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கக் கோரிய போது காவல்துறை இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது. இவ்வழக்கு தொடர்பாக சுக்விந்தர் சிங் மற்றும் CREST-இன் கணக்காளர் சஹில் குக்கர் ஆகியோரை காவல்துறை ஏற்கனவே கைது செய்திருந்தது.
விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் நளினி மாலிக் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, தான் 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சண்டிகர், செக்டார் 32-இல் அமைந்துள்ள IDFC First Bank கிளையில் கிளை மேலாளராகப் பணியாற்றியதாக ரிபவ் ரிஷி ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவர் மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, தனது கிளையிலேயே மாநகராட்சியின் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, ரூ. 116 கோடி மதிப்பிலான போலி FDR-களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், நளினி மாலிக் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோருடன் இணைந்து அவர் போலி நிறுவனங்களையும் உருவாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
