சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, புதன்கிழமை மாலை பெய்ஜிங் சென்றடைந்தார். அவரது இரண்டு நாள் பயணத்தின் போது, சுங்க வரிகள், தொழில்நுட்பப் போட்டி, ஈரான் போர் மற்றும் தைவானுடனான அமெரிக்காவின் உறவு ஆகியவை குறித்து இந்த உலக வல்லரசுகளும் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கை தொடர்பாக அதிகரித்து வரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், டிரம்ப் 2017-ல் பயணம் மேற்கொண்ட சீனாவை விட இப்போது அதிக ஆதிக்கம் செலுத்தும் சீனாவிற்குத் திரும்பியுள்ளார்.
இந்தப் பயணம் முதலில் மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
சீனாவின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான சீனத் துணை அதிபர் ஹான் ஜெங், சிவப்பு கம்பளத்தில் டிரம்பை வரவேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் அவரது மகன் எரிக் டிரம்ப் மற்றும் டெஸ்லாவின் எலான் மஸ்க், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல அமெரிக்க தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்களும் உடன் வந்தனர்.
“அசாதாரணமான சிறப்பு வாய்ந்த தலைவரான ஜனாதிபதி ஷியிடம், சீனாவை ‘திறந்துவிடுமாறு’ நான் கேட்டுக்கொள்வேன். அப்போதுதான் இந்தத் திறமையானவர்கள் தங்கள் மாயாஜாலத்தை நிகழ்த்தி, மக்கள் குடியரசை இன்னும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவுவார்கள்,” என்று டிரம்ப் தரையிறங்குவதற்கு முன்னதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
அதிகரித்து வரும் சுங்க வரிப் போர் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இருதரப்பு வர்த்தகம் மொத்தம் $41,470 கோடியாக இருந்தது. இது 2022-ல் பதிவு செய்யப்பட்ட $69,040 கோடியிலிருந்து ஒரு பெரும் சரிவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும் டிரம்ப் விரும்புகிறார். கடந்த ஆண்டு, அமெரிக்கா சீனாவிற்கு ஏற்றுமதி செய்ததை விட 20,000 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை அங்கிருந்து இறக்குமதி செய்தது.
ஈரான் மீது தனது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று பெய்ஜிங் மீது அமெரிக்காவிலிருந்து பெருகிவரும் அழுத்தம் உள்ளது.
