வெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு
தங்கம், வெள்ளி இறக்குமதி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கத்தைச் சமன் செய்யவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், அதிகரித்து வரும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாயை வலுப்படுத்தவும், வெள்ளி இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் உத்தரவை இந்திய அரசு பிறப்பித்தது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு 15 சதவீதமாக உயர்த்தியதற்கும், பின்னர் தங்க இறக்குமதி தொடர்பான விதிமுறை இணக்க நடைமுறைகளை இறுக்கியதற்கும் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, எடையளவில் 99.9 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வெள்ளி உள்ளடக்கம் கொண்ட, தங்கம் மற்றும் பிளாட்டினம் பூசப்பட்ட வெள்ளி உட்பட அனைத்து வெள்ளி கட்டிகளுக்கும் (silver bars) இறக்குமதிக் கொள்கையானது, “தடையற்ற” (Free) நிலையிலிருந்து “கட்டுப்படுத்தப்பட்ட” (Restricted) நிலைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற வெள்ளிக் கட்டி வகைகளுக்கும் இதே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், வெளிநாட்டு வர்த்தக மற்றும் வணிக இயக்குநரால் கையெழுத்திடப்பட்ட அந்த உத்தரவின்படி, இந்த மாற்றம் “ITC (HS) 2022-இன் அட்டவணை – I (இறக்குமதிக் கொள்கை) அத்தியாயம் 71-இன் கொள்கை நிபந்தனை எண் 7-க்கு உட்பட்டது” என்றும், இது “உடனடியாக அமலுக்கு வரும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 13 அன்று, விலையுயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம், 2024-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வரிக்குறைப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. மே 12 அன்று வெளியிடப்பட்ட பல சுங்க அறிவிக்கைகள் வாயிலாக, நிதி அமைச்சகம் இந்த மாற்றங்களை அறிவித்தது. திருத்தப்பட்ட இந்த வரி விகிதங்கள் மே 13 முதல் அமலுக்கு வந்தன.
இந்த மாதத் தொடக்கத்தில், தங்கம் இறக்குமதி மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் முன் அனுமதித் திட்டத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கான இணக்க விதிமுறைகளைக் கடுமையாக்கியது. இதன் ஒரு பகுதியாக, கடுமையான அளவு வரம்புகள், நேரடிச் சரிபார்ப்புத் தேவைகள் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை சமர்ப்பிக்கும் கடமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பில், தங்க இறக்குமதிக்கான முன் அனுமதி (AA) “அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட அளவு வரம்பான 100 கிலோகிராமுக்கு உட்பட்டு வழங்கப்படும்” என்று கூறியுள்ளது.
