கார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்
கார்டியன் லைஃப் இன்ஸுரன்ஸ் நிறுவனத்துடனான ஏழு ஆண்டு கால கூட்டணியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவைச் சேர்ந்த கார்டியன் இந்தியா ஆப்பரேசனஸ் நிறுவனத்தை 1.5 கோடி டாலருக்கு (சுமார் ரூ. 101 கோடி) கையகப்படுத்துவதாக HCL டெக் அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அந்த நிறுவனத்தின் சுமார் 2,000 ஊழியர்கள் HCL டெக்கிற்கு மாற்றப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நிறுவனத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளுக்கான உலகளாவிய திறன் மையம்(GCC) ஆகச் செயல்படும் கார்டியன் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை HCL டெக் கையகப்படுத்தும்.
கார்டியன் லைஃப் இன்ஸுரன்ஸ் கம்பெனி ஆஃப் அமெரிக்கா என்பது காப்பீடு, ஓய்வூதியம், செல்வ மேலாண்மை மற்றும் ஊழியர்களுக்கான சலுகை சார்ந்த தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
“கார்டியனின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தொழில்நுட்பப் புத்தாக்கம், பொறியியல் சிறப்பு, செயல்பாட்டு மாற்றம் மற்றும் முதிர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு பிரத்யேக, உத்தி சார்ந்த வணிகப் பிரிவு (SBU) உருவாக்கப்படும். இதன் மூலம் கார்டியன் இந்தியாவின் சுமார் 2,000 ஊழியர்கள் HCL டெக்குடன் இணைவார்கள்,” என்று HCL டெக் ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.
தற்போது கார்டியன் இந்தியாவின் இந்திய பிரிவின் தலைவராக இருக்கும் கருணாகரன் அழியசூர், புதிய SBU-ஐ வழிநடத்த HCL டெக்கில் இணைவார்.
இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 1, 2026-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏழு ஆண்டு கால கூட்டாணியானது, கார்டியனின் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீனமயமாக்கலை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்டியனுக்காக ‘ஏஜென்டிக்’ திறன்களை உருவாக்கவும் செயல்படுத்தவும், HCL டெக் அதன் AI சேவை மாற்றத் தளமான AI ஃபோர்ஸின் பயன்பாட்டை விரிவுபடுத்தும்.
“கார்டியனிலிருந்து எங்களுடன் இணையும் திறமையான குழுவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இணைந்து செயல்படுவதன் மூலம், தயாரிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை கூட்டாக உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது HCL டெக்கின் துறைசார் நிபுணத்துவத்தை ஆழமாக்கவும், எங்கள் AI-சார்ந்த தளங்களை மேலும் வலுப்படுத்தவும், உதவும்,” என்று HCL டெக்கின் தலைமை வளர்ச்சி அதிகாரி சீனிவாசன் சேஷாத்ரி கூறினார்.
