தங்கம், வெள்ளி மீதான சுங்க வரிகள் 6%-லிருந்து 15% ஆக அதிகரிப்பு
தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் போது, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கணக்கில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரிகளை 6%-லிருந்து 15% ஆகவும், பிளாட்டினம் இறக்குமதி மீதான வரியை 6.4%-லிருந்து 15.4% ஆகவும் கடுமையாக உயர்த்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் உலோகக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட தொடர்புடைய பொருட்களிலும் இதன் விளைவாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீது 10% அடிப்படை சுங்க வரியுடன், 5% வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியையும் (AIDC) அரசு விதித்துள்ளது. இதன் மூலம், மொத்த இறக்குமதி வரி 15% ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசிய நெருக்கடியுடன் தொடர்புடைய அதிகரித்த உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காலகட்டத்தில், மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவணியைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு கொள்கை நடவடிக்கையாக, தங்கம், தங்க டோரே, வெள்ளி, வெள்ளி டோரே மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள உலோகங்கள் மீதான சுங்க வரி உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான சுங்க வரி உயர்வானது, தவிர்க்கக்கூடிய இறக்குமதித் தேவையைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டுக் கணக்கில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை தடைசெய்யும் தன்மையுடையதோ அல்லது நுகர்வோருக்கு எதிரானதோ அல்ல. வெளிநாட்டுப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நேரத்தில், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், கவனமாக அளவிடப்பட்ட மற்றும் விகிதாசாரமான ஒரு தலையீடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த அதிக இறக்குமதி வரிகள், உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு நாடானா இந்தியாவில் தேவையைக் குறைக்கக்கூடும். இந்த நடவடிக்கை வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிகவும் பலவீனமான நாணயங்களில் ஒன்றாக இருந்துவரும் ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் உதவக்கூடும்.
அதே நேரத்தில், 2024-ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா வரிகளைக் குறைத்த பிறகு தணிந்திருந்த தங்கக் கடத்தலை, கடுமையாக உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகள் மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடும் என்று தொழில்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
