ரெசால்வ் ஏஐ நிறுவனத்துடன் உடன் கூட்டணி அமைக்கும் டி.சி.எஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், உலகளாவிய சில்லறை விற்பனையாளர்களுக்காக முகவர் வழி செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வர்த்தகத் தீர்வுகளை கூட்டாக உருவாக்கி விரிவுபடுத்துவதற்காக, AI-சார்ந்த வர்த்தக உள்கட்டமைப்பு வழங்குநரான ரெசால்வ் ஏஐ (Rezolve Ai) உடன் ஒரு கூட்டு முயற்சியை அறிவித்தது.
இந்தக் கூட்டணி வளர்ந்து வரும் முகவர் வழி வர்த்தகச் சந்தையில் டிசிஎஸ்-இன் நுழைவைக் குறிக்கிறது. இச்சந்தையில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தயாரிப்புகளைக் கண்டறிதல், உரையாடல் வழி ஷாப்பிங் மற்றும் பணம் செலுத்தும் செயல்முறைகள் போன்ற வர்த்தகம் தொடர்பான பணிப்பாய்வுகளைத் தன்னிச்சையாக நிர்வகித்து செயல்படுத்த முடியும்.
இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, சில்லறை விற்பனை நிறுவனங்கள் தங்கள் பெருநிறுவன அளவிலான செயல்பாடுகளில், ரெசால்வ் ஏஐ-இன் பிரத்யேக வர்த்தகத் தளமான பிரைன்போவா™-வை (brainpowa™) பயன்படுத்த டிசிஎஸ் உதவும். உரையாடல் வழி வர்த்தகம், அறிவார்ந்த கண்டறிதல் மற்றும் முகவர் வழி பணம் செலுத்துதல் ஆகியவற்றில் AI-சார்ந்த வாடிக்கையாளர் அனுபவங்களைச் செயல்படுத்தும் வகையில் இந்தத் தீர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
ரெசால்வ் ஏஐ-இன் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் எம். வாக்னர் கூறுகையில், “டிசிஎஸ் அசாதாரணமான அணுகல், நிறுவனங்களின் மீதான ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் உலகளாவிய செயல்படுத்தும் திறனைக் கொண்டுவருகிறது. நாங்கள் இணைந்து, முகவர் வழி வர்த்தகத்தை ஒரு தளப் புத்தாக்கத்திலிருந்து பெருநிறுவன அளவிலான பயன்பாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு தெளிவான பாதையை உருவாக்குகிறோம்”என்றார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா சில்லறை விற்பனைப் பிரிவுத் தலைவர் சேகர் கிருஷ்ணன் மேலும் கூறுகையில், “உள்நாட்டுப் புத்தாக்கத்தை உத்தி சார்ந்த கூட்டணிகளுடன் ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவைத் தொழில்மயமாக்கவும், நிறுவனங்களுக்கு அளவிடக்கூடிய, நிஜ உலகப் பலன்களை வழங்கவும், ஒரு ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவுச் சூழலமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்”என்றார்.
உலகெங்கிலும் உள்ள டிசிஎஸ்-இன் பேஸ் போர்ட் புத்தாக்க மையங்கள் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் இந்த முகவர் வர்த்தகத் தீர்வுகளைச் சோதித்து அனுபவிக்க முடியும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.
ஆட்டோமேசன் மற்றும் ஏ.ஐ சார்ந்த வணிகப் பயன்பாடுகளுக்கான நிறுவனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
