பிரிட்டானியா, இந்தியாவில் அதிகரிக்கும் உள்ளூர் பிராண்டு போட்டியை சமாளிக்க புதிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது
பிரிட்டானியாவின் புதிய உள்ளூர்மயமாக்கல் உத்தி
இந்தியாவில் அதிகரித்து வரும் உள்ளூர் பிராண்டுகளின் கடுமையான போட்டியைச் சமாளிக்க, பிரிட்டானியா நிறுவனம் ஒரு புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.
இனி இந்தியாவை ஒரே நாடாக அணுகாமல், “பல தனித்தனி நாடுகளின் தொகுப்பாக” கருதி செயல்படப் போவதாக பிரிட்டானியாவின் துணைத் தலைவர் வருண் பெர்ரி தெரிவித்துள்ளார்.
இப்போதைய சூழலில், நிறுவனம் விலைப் போரில் ஈடுபட விரும்பவில்லை. மாறாக, அதன் பலமான பிராண்ட் மதிப்பு, சிறந்த செயல்பாடு, நாடு முழுவதும் பரவியுள்ள 70 தொழிற்சாலைகளின் கட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்தி தனது சந்தைப் பங்கை வலுப்படுத்த பிரிட்டானியா திட்டமிடுகிறது.
கடந்த 13 வருடங்களாக, பிரிட்டானியா தனது வருவாயில் கிட்டத்தட்ட 2% தொகையை, செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் மூலம் சேமித்து வருகிறது. இந்த அணுகுமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பெர்ரி உறுதியளித்துள்ளார்.
மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு தற்போது நிலையான நிலையில் இருப்பதால், அது நிறுவனத்தின் லாப வரம்புகளை பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல புதிய உள்ளூர் நிறுவனங்கள் குறைந்த லாபம் காரணமாக, நீண்டகாலத்திற்கு சந்தையில் நிலைத்து நிற்பதில்லை என்று பெர்ரி சுட்டிக்காட்டினார். இருப்பினும், பிரிட்டானியா இந்த உள்ளூர் நிறுவனங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனமாக கண்காணித்து, அதற்கு ஏற்றாற்போல் உள்ளூர் உத்திகளை வகுக்கிறது. இந்த பிராண்டுகள் நுகர்வோரிடம் ஆழமாக வேரூன்றி உள்ளன.
தற்போது, பிரிட்டானியா புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்டவில்லை. குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஏற்கனவே இருக்கும் தயாரிப்புப் பிரிவுகளை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தப்படும். ரஸ்க், வேஃபர்ஸ், குரோசான்ட்ஸ், மில்க் ஷேக்ஸ் போன்ற சில துணைப் பிரிவுகளில் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.
அதேசமயம், பால் வர்த்தகம் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. எனினும், கடந்த சில ஆண்டுகளில் அதன் வருவாயை ₹400 கோடியிலிருந்து ₹700 கோடியாக உயர்த்தியுள்ளோம் என்றும், பால் வணிகத்தில் பெரிய இலக்குகளை அடைவோம் என்றும் பெர்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல தொழிற்சாலைகளில் முதலீடு செய்திருப்பதால், இருக்கும் உற்பத்தி திறனை முழுமையாகப் பயன்படுத்திய பின்னரே, அடுத்தகட்ட முதலீடுகளைப் பற்றி யோசிப்போம் என அவர் தெளிவுபடுத்தினார்.
