மொராக்கோவில் டாடா :
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், மொராக்கோ நாட்டின் பெர்ரெச்சிட் நகரில், தனது முதல் வெளிநாட்டு பாதுகாப்பு உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்துள்ளது.
இந்த ஆலையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இணைந்து உருவாக்கிய நவீன கவச வாகனமான வீல்டு ஆர்மர்டு பிளாட்ஃபார்ம் 8×8 (WhAP 8×8) தயாரிக்கப்பட உள்ளது.
இந்த ஆலையை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மொராக்கோ நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அப்தெல்டிப் லவுடி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இது ஒரு இந்திய தனியார் நிறுவனம் வெளிநாட்டில் அமைத்துள்ள முதல் பாதுகாப்பு உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. இது, இந்திய பாதுகாப்புத் துறையின் வடிவமைப்பு, விநியோகத் திறன்களை சர்வதேச அளவில் பறைசாற்றுகிறது.
20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, மொராக்கோவில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தித் தளமாகும். மொராக்கோ அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின்படி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், WhAP 8×8 வாகனங்களை உற்பத்தி செய்து விநியோகிக்க உள்ளது.
முதல் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் விநியோகிக்கப்படும். இந்த ஆலை திட்டமிட்ட காலத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுகரன் சிங், இது இந்தியா-மொராக்கோ தொழில் partnership-ல் ஒரு புதிய அத்தியாயம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
இந்த ஆலை, முதலில் மொராக்கோ ராணுவத்திற்கு வாகனங்களை வழங்கும் என்றும், எதிர்காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பிற நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது, அதிக இயக்கம், சிறந்த பாதுகாப்பு, பல்வேறு பணிகளைச் செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன கவச வாகனமாகும். இதில் கடினமான நிலப்பரப்புகளில் இயங்குவதற்கான சக்திவாய்ந்த எஞ்சின், பலம் வாய்ந்த உடற்கவசம், பல்வேறு போர்ச் சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக்கூடிய ஆயுத அமைப்புகள் உள்ளன.
