2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியின் பங்குகள், மும்பை பங்கு சந்தையில் நிலவிய ஒட்டுமொத்த சரிவையும் மீறி, வியாழன் அன்று சுமார் 17% உயர்ந்தன. மேலும், அந்நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கிய லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) செல் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, வெறும் இரண்டு நாட்களில் 22% உயர்ந்துள்ளது.
இந்த மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் பங்குகள் வியாழன்று ஒரு பங்குக்கு ரூ.35.30 ஆக உயர்ந்தன. இது நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனத்தில் ரூ.2,850 கோடிக்கும் அதிகமாகச் சேர்த்து, அதை ஏறக்குறைய ரூ.15,600 கோடியாக உயர்த்தியது. வெள்ளிக்கிழமை இந்த பங்கு விலை ரூ.40.40ஆக மேலும் அதிகரித்தது.
இந்த வாரத் தொடக்கத்தில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் அந்நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கிய லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) செல் தயாராகிவிட்டதாக எக்ஸ் தளத்தில் அறிவித்தார். “இது எங்களின் 46100 ஃபார்மட் செல் ஆகும் ; இது எங்களின் தற்போதைய NMC செல்லை விடப் பெரியது. இது அடுத்த காலாண்டிலிருந்து எங்கள் தயாரிப்புகளில் இடம்பெறத் தொடங்கும்” என்று அவர் கூறினார்.
புதிய LFP செல், செலவுகளை மேலும் குறைக்கவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், நிறுவனத்தின் பரந்த பேட்டரி சேமிப்பு இலக்குகளுக்கு அடித்தளமிடவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அகர்வால் கூறினார். மேலும், இது தங்களின் ஜிகாஃபேக்டரி விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஜிகாஃபேக்டரி 2.5 GWh திறன் கொண்டது என்றும், அது 6 GWh ஆக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், புதிய LFP செல் இன்னும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் “வணிகச் செயல்திறனில் வலுவான மீட்சி” ஏற்பட்டதாக அறிவித்தது; மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தினசரி ஆர்டர்கள் 1,000 யூனிட்டுகளைத் தாண்டியது. இதற்கிடையில், அதன் விற்பனை பிப்ரவரியில் 3,973 யூனிட்டுகளாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 10,117 யூனிட்டுகளாக, மாதந்தோறும் 150%க்கும் மேல் அதிகரித்தன. இந்நிறுவனம் அதன் சந்தைப் பங்கு, மாதம்-மாதம் அடிப்படையில் ‘V’ வடிவ மீட்சியைச் சந்தித்ததாகவும், மாதம் முழுவதும் தொடர்ந்து சந்தைப் பங்கை ஈட்டி வந்ததாகவும் தெரிவித்தது.
