பணவீக்கம், ‘எல் நினோ’ அபாயங்கள் பற்றி எச்சரிக்கும் ஐடிசி-யின் சஞ்சீவ் பூரி
ஐடிசி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் பூரி கூறுகையில், தற்போது பொருளாதாரத்தில் மந்தநிலைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், பணவீக்கம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) ஆகியவை முக்கிய கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன என்றார். ET ஊடகத்தின் இரண்டு மணி நேர நேர்காணலில், ஹோட்டல்கள் உட்பட பல்வேறு வணிகப் பிரிவுகளில் நடுத்தர காலத்தில் ரூ.20,000 கோடியை முதலீடு செய்யவிருப்பதாக பூரி தெரிவித்தார். மேலும், அதன் FMCG (நுகர்வோர் பொருட்கள்) வணிகத்தில் ஆண்டுதோறும் 80-100 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் லாப வரம்பை (margins) தொடர்ந்து அதிகரிக்கவும் ஐடிசி திட்டமிட்டுள்ளது.
”நல்ல செய்தி என்னவென்றால், உலகப் பொருளாதாரங்கள் கொந்தளிப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வரும் சூழலிலும், இந்தியா இந்தப் பாதையை மிகச் சிறப்பாகக் கடந்து வருகிறது. அவ்வப்போது சில தடைகள் அல்லது சவால்கள் இருந்தாலும், நாடு நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது மற்றும் வலுவான பாதையில் பயணிக்கிறது” என்று சஞ்சீர் பூரி குறிப்பிட்டார்.
”நேர்மறையான அம்சமாக, இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. வருமான வரி மாற்றங்கள், ஜிஎஸ்டி சீரமைப்பு மற்றும் பொதுத்துறை மூலதனச் செலவினங்களின் அதிகரிப்பு போன்ற முற்போக்கான கொள்கை நடவடிக்கைகள் வளர்ச்சிக்குத் துணை புரிந்துள்ளன. கிராமப்புற முதலீடுகள், GCC (உலகளாவிய திறன் மையங்கள்) விரிவாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றிலும் வலுவான வேகத்தைக் காண்கிறோம்.
கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்புகளின் பலன்களை நாங்கள் கண்டோம்; இது வலுவான வளர்ச்சிக்கு உதவியது. அந்த ஆரோக்கியமான வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து நீடிக்கிறது” என்கிறார்.
”வளர்ச்சி தொடர்ந்தாலும், பணவீக்கத்தால் ஏற்படும் மறைமுக அல்லது அடுத்தகட்ட விளைவுகள் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளன. பணவீக்கம் நுகர்வைப் பாதிக்கும் என்பதை வரலாற்றுத் தரவுகள் காட்டுவதால், இது நிச்சயமாக ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
கவலைக்குரிய மற்றொரு அம்சம் ‘எல் நினோ’ ஆகும். அரசாங்கம் இது குறித்து முன்கூட்டியே செயல்பட்டு வருகிறது மற்றும் அபாயங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும். தற்போதைய நிலவரப்படி, பொருளாதார மந்தநிலைக்கான எந்தத் தரவோ அல்லது ஆதாரமோ இல்லை. இருப்பினும், இது நிச்சயமாக எச்சரிக்கையுடன் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்” என்றார்.
