தென் கொரியாவின் AI-சிப் திட்டத்திற்கு சாம்சங், SK ஹைனிஸ் ஆதரவு
தென் கொரியா திங்களன்று செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த விரிவான முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. பல ஆண்டுகளில் 57,600 கோடி டாலருக்கும் அதிகமான முதலீடுகள் மூலம் இத்துறையில் நாட்டின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதாக அதிபர் லீ ஜே-ம்யுங் உறுதியளித்தார்.
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், சியோல் பெருநகரப் பகுதிக்கு அப்பால் உள்ள பொருளாதாரங்களை மீட்டெடுப்பதற்கும் அவர் அளித்த வாக்குறுதியுடன், நாட்டின் AI மற்றும் செமிகண்டக்டர் லட்சியங்களை ஒருங்கிணைப்பதற்கான லீயின் மிகத் துணிச்சலான முயற்சியாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தொலைக்காட்சி வாயிலாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் போது, உலகின் மிகப்பெரிய மெமரி சிப் தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் SK ஹைனிஸ் ஆகியவற்றின் தலைவர்களும் அவருடன் இணைந்திருந்தனர்.
“மற்ற எந்த நாட்டையும் விட வேகமாக AI-இன் முக்கிய அம்சங்களை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அதிபர் கூறினார். “செமிகண்டக்டர்கள், இயற்பியல் AI மற்றும் AI தரவு மையங்கள் ஆகியவை நமது பெரும் முன்னேற்றத்திற்கான மூன்று முக்கிய தூண்களாகும்.”
தென் கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் தலா இரண்டு புதிய சிப் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக, சாம்சங் மற்றும் SK ஹைனிக்ஸ் நிறுவனங்கள் தங்கள் விநியோகஸ்தர்களுடன் இணைந்து 800 லட்சம் கோடி வோன் (51,787 கோடி டாலர்) முதலீடு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு நகரமான குவாங்ஜு மற்றும் தென் ஜியோல்லா மாகாணம் ஆகியவை இத்திட்டங்களில் 5 முதல் 20 லட்சம் கோடி வோன் வரை முதலீடு செய்யும் என்றும், சியோலுக்கு அருகிலுள்ள சுங்ச்சியோங் பகுதியில் சிப் பேக்கேஜிங் மையத்தை உருவாக்க மேலும் 81 லட்சம் கோடி வோன் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாகவும் லீ கூறினார்.
அதிக அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ள மின்சார வளத்தைப் பயன்படுத்தி, தென்மேற்குப் பகுதி முக்கிய செமிகண்டக்டர் உற்பத்தி மையங்களாகத் திகழும் என்று லீ குறிப்பிட்டார்.
“செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதால், தற்போது கட்டுமானத்தில் உள்ள உற்பத்தி மையங்களை நாம் விரைவாக நிறைவு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
